முந்தைய பதிவு
நாம் அறிந்தோ அறியாமலோ, காமத்தில் நம்மை வலுக் கட்டாயமாக ஈடுபடுத்தும் அந்த இச்சா சக்தியின், அடிப்படை தேவை புத்திர உற்பத்திதான். மகாபாரதத்தில் பித்ரு பிண்டம் கொடுப்பது, அல்லது நீத்தார் நினைவு என்பது பற்றி பாண்டு எவ்வளவு வருத்தப் படுவான் என்பது மகாபாரதத்தை சிரத்தையுடன்  படித்தவர்களுக்குத் தான் தெரியும். அதனால்தான் குழந்தை வேண்டும் முயற்சியில் தனது உயிரையே விட்டான்.

பித்ரு பிண்டம் கொடுப்பது (திதி) ஒருவகையில் பார்த்தால் இன்னாரின் வாரிசுகள் இப்பூமியில் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதை இப்புவியில் இருக்கும் சக மனிதர்களுக்கு மட்டுமல்லாது  அதை அவர்களது முன்னோர்களுக்கு தெரிவிப்பதும் அதை அவர்கள் அறிந்து கொள்ளும் ஒருவித நுட்பமும் கொண்ட சடங்காகும். உயிரின் அடிப்படையே சந்ததிகளை உருவாக்குவதும், அதை பாதுகாப்பதும் ஆகும். தன் வாரிசுகள் பூமியில் நிலைத்து இருக்க வேண்டும் என்பதற்காக உயிர் இனங்கள் என்னென்ன செய்கின்றன என்பதை எனது முந்தைய பதிவுகளில் காணலாம்.

ஒரு எருக்களை செடி  கூட தனது விதைகளைப் பரப்புவதற்கு முதலில் காயை வெடிக்கச் செய்து, விதைகளைத் தூவுகிறது. பின்னர் ஒருசமயம், விதைகள் மொத்தமாய் விழுந்து ஒரே இடத்தில் கிடைக்கும் குறைந்த வாய்ப்புகளை மொத்தமாய் பயன்படுத்தி, மொத்தமாய் அழிய வேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலாகத் தன் விதைகளில் மயிர்க்கால்களை ஒட்ட வைத்து வெடித்தவுடன், காற்றின் வேகத்தில் தூரங்களை கடந்து புதிய இடங்களில் வெற்றிக் கொடியை நட்டு, இனத்தைப் பரப்புகிறது. இதெல்லாம் ஓரிரவுக்குள் நடந்த மாயாஜாலம் அல்ல .காலங்களை யுகங்களாக விழுங்கிய அறிவியல் செயற்பாடு. 

இனத்தைப் பூமிப் பரப்பின் மீது பரப்புவதில் உயிரினங்கள் ஏன் அக்கறை எடுத்துக் கொள்கிறது என்பதைப் பற்றியும் முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.
முதலில் குழந்தை எப்படி பிறக்கிறது, அதிலுள்ள சிக்கல்கள் என்ன? தீர்வு என்ன? என்பதை மேலோட்டமாகப் பார்ப்போம். திருமணமாகும் ஆறு ஜோடியில் ஒரு ஜோடிக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் என புள்ளி விவரம் கூறுகிறது. மருத்துவச் சோதனைகள் என்று போய் விட்டால் அதற்கு ஒரு பெரிய அட்டவணையே உள்ளது. மாதவிடாய், முட்டைப்பை, முட்டையின் முழுமை, ஃப்ல்லோப்பியன் குழாய், கர்ப்பப்பையின் பின்வாசல்,  கர்ப்பப் பையின் நுழைவாசல், பெண்ணுறுப்பு, ஆணுறுப்பு, விந்துப் பை, விந்துக் குழாய், விந்து, உயிரணுவின் தன்மை, என்று பலவகையிலும் பார்க்க வேண்டும். முருகன் மயிலேறி உலகைச் சுற்றி வந்த கதையாகி விடும் .

ஆகவே அதை விடுத்து விநாயகர் பாணியில் நல்லதையே எண்ணி மேலோட்டமாகச் சில சோதனைகளை செய்து விட்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லுங்கள். மருத்துவ ரீதியாக அணைத்து தகுதிகள் இருந்தும் 25 சதவீத பேருக்கு குழந்தை தாமதமாக அல்லது இல்லாமல் போவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அவை அதிகரிப்பதும் கணக்கில் கொள்ளத்தக்கது. 
மேலோட்டமானவை என்பது கீழ்க் கண்டவைகள்தான்.
1 மாதவிடாயின் சீர்மை
2 விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் இயக்கம்
3 பார்க்கும் வேலையின் தன்மை
4 ஆர் ஹெச்( Rh factor) ஒவ்வாமை
5. பி.எம் ஐ (Body Mass Index) இண்டெக்ஸ்
6 வாழ்க்கை முறை

முதலில் மாதவிடாய் பற்றி தெரிந்து கொள்வது நல்லது
பெண்ணுக்கு முட்டைப் பைகள் இரண்டு உள்ளது. மாதம் ஒரு முறை ஒவ்வொன்றி லிருந்தும் மாற்றி மாற்றி ஒவ்வொரு முட்டையாக ஃபலலோப்பியன் குழாய் மூலமாக முட்டை கருப்பையை அடைகிறது. கலவிக்குப் பின் பெண்ணுறுப்பின் வழியாக வரும் கோடான கோடி விந்தணுக்களில் ஏதாவது ஒன்று கருப்பைக்கு வந்து  முட்டையை துளைத்து உள்ளே சென்று கருவுறச் செய்கிறது.

                                    

ஒரு பெண் பிறக்கும் போதே தனது முட்டைப் பையின் இரு பிரிவுகளில், ஒவ்வொன்றிலும் தலா ஒரு மில்லியன் (1,000,000) முழு வளர்ச்சி அடையாத முட்டையின் கருக்களுடன் பிறக்கிறாள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் அதிகபட்சமாக பத்து பிள்ளைகள் பெற்றுக் கொள்ளும் பெண்ணுக்கு எதற்கு ஒரு மில்லியன் முட்டைகள்? இங்குதான் மனிதன் தன்னை எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் தாரளமாகத் தகவமைத்துக் கொண்டான் என்பதை அறியமுடிகிறது. 

எப்பொழுதுமே மனித உடம்பு, தேவைக்கு மேல் 50 சதவீதம் அதிகமான உடலுறுப்புகளுடன் தான் தகவமைக்கப் பட்டுள்ளது. நுரையீரல், கிட்னி, மூக்கு துவாரம், முட்டைப் பைகள், விதைப் பைகள், கண், காது, கை, கால் என எல்லாமே இரண்டிரண்டாக  உள்ளது. தேவைக்கு மேல் 50 சதவீதம் அதிகமான வயிறு, 50 சதவீதம் அதிகமான கல்லீரல், 80 சதவீதம் அதிகமான மூளை, 80 சதவீதம் அதிகமான குடல், ஒரு கோடி மடங்குக்கு அதிகமான விந்து., ஒரு மில்லியன் மடங்கு அதிகமான முட்டை என எல்லாமே தேவைக்கு அதிகமாகத் தான் உள்ளது. இந்த வகையில் மனித இனத்திற்கு ஏதாவது ஒரு காலத்தில் (தேவைப் பட்ட) அல்லது தேவைப் படும் போது பயன் படுத்திக் கொள்ளலாம் என்பதற்கான ஏற்பாடாக ஒரு மில்லியன் முட்டைகள் இருக்கலாம்.

பருவம் எய்தும் போது, அதில் ஐந்தில் ஒரு பங்குதான் அதாவது சுமார் 2,00,000 + 2,00,000 மிஞ்சியிருக்கின்றன. மற்றவை ஒருவித நடை முறையை பின்பற்றி அழிக்கப்படுகின்றன. பெண்ணிற்கு கருத்தரிக்கும் காலம் சுமார் 13 வயதிலிருந்து 53 வயது வரை உள்ள மாதவிடாய் காலம் தான். இந்த சுமார் 40 வருடங்களில் வருடத்திற்கு சுமார் 12 முட்டைகள் என்ற விகிதத்தில் சுமார் 500 முட்டைகள் மட்டுமே இன விருத்திக்கு தயார் படுத்தப் படுகிறது. முட்டையின் அளவோ கண்களால் பார்த்தறிய முடியாத அளவுக்கு மிகவும் சிறியது.( .02mm) .முட்டை எப்படி முழுமை அடைகிறது?, எப்பொழுது முழுமை அடைகிறது? என்பது இதுநாள் வரை மர்மமாக இருந்தது. பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளார் வேறெரு அறுவை சிகிச்சை  செய்யும் பொழுது தற்செயலாக முட்டை முழுமை அடைவதை தனது கேமிராவில் பிடிக்க நேர்ந்தது. அவைதான் கீழ்க் கண்ட படங்கள் . வைரமுத்து கூறியதைப் போல் தண்ணீர்க் குடத்தில் தான் பிறக்கின்றோமோ!


குழந்தை ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் வெளியேறிய முட்டைகள் தவிர மற்றவை எல்லாம் முழுமை அடையாமல் மாதாந்திர தவணை முறையில் அழிக்கப் படுகிறது.  மிச்சம் உள்ள முட்டைகளும் மாதவிடாய் நிற்கும் (மெனோபாஸ் ) காலத்தில் முற்றிலும் அழிக்கப் படுகிறது. குழந்தைகளை வரிசையாக இடைவெளி இல்லாமல் பெற்றுக் கொண்டால் ஒரு பெண் அதிகபட்சமாக 60 (இரட்டைக் குழந்தைகளையும் சேர்த்து) குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதனால் தெரிவது என்ன வென்றால் குசேலர் 27 குழந்தை பெற்றுக் கொண்டது பெரிய ஆச்சரியமல்ல. ஏனென்றால் ஒரு ரஷ்யப் பெண் 27 பிரசவத்தில் 69 குழந்தைகள் பெற்றதாக கின்னஸ் ஆவணப்படி தகவல் உள்ளது. தமிழ்நாட்டில் 16 குழந்தைகள் பெற்றவர்களுக்கு பரிசு கொடுத்து கெளரவித்த வரலாறும் தமிழனுக்கு உண்டு. இந்த விஷயம் தெரியாமல் பெரியார் முட்டாள்தனமாக குசேலர் 27 குழந்தைகள் பெற்றுக் கொண்டது நம்ப முடியாத பொய் எனக் கூறுவதும். அதற்கு மடத்தனமான விசிலடிச்சான் குஞ்சுகள் விசில் போடுவதும் தமிழ் நாட்டில் “பகுத்தறிவின்” வளர்ச்சியைக் காட்டுகிறது,.
கர்ப்பபை என்ற அரண்மனையில் என்னதான் நடக்கிறது?

இரா.சந்திரசேகர்
பழனி.



மேலும் படிக்க...!

உங்களுக்கு சமீபத்தில் திருமணமாகிருந்தால் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என அறிந்து கொள்ளூம் எளிய வழி.

  
கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு நீங்கள், அல்லது உங்கள் துணைவர் அல்லது இருவரும் மிகவும் உண்மையான பதிலை எழுதிக்கொள்ளுங்கள்.  



1) உங்கள் துணைவர் உங்களை விட அழகானவரா?. 
2) உங்கள் துணைவர் உங்களை விட செல்வந்தரா?.
3) உங்கள் துணைவர் சமூகத்தில் உங்களை விட புகழ் வாய்ந்தவரா?.
4) உங்கள் துணைவரின் குடும்பம் உங்கள் குடும்பத்தை விட செல்வாக்கு மிக்கதா?.
5) உங்கள் துணைவர் உங்களை விட முன்கோபியா?, (ஆணாக இருந்தால் முகத்தில் பெரிய மீசை உள்ளவரா?) அல்லது சிடுமூஞ்சியா?.
6) உங்கள் துணைவரைக் கண்டால் பயமா?.
7) நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் எதிர் பாலினத்தார் மிகவும் அதிகமா? .
8) உங்கள் துணைவர் உங்களை விட வெள்ளையான தோல் நிறம் கொண்டவரா?.
9) உங்கள் துணைவர் உங்களை விட செக்ஸில் ஆர்வமும், திறமையும் உள்ளவரா?.
10) உங்கள் துணைவர் எல்லா விஷயங்களிலும் உங்களை விட தைரியமானவரா?.
11) நீங்களிருவரும் குடியிருக்கும் (இருந்த) வீட்டில், நெருங்கி உள்ளவர்களில் அதாவது உடன் பிறந்தவர்கள், பிறந்தவர்கள், பெற்றோர், பெற்றோரின் பெற்றோர்கள், ஆகியோரில் உங்கள் துணைவரின் பாலினம் அதிகமாக உள்ளனரா?.
12) உங்கள் துணைவர் உங்களை விட ஸ்டைலாகவும், சுத்தமாகவும், நேர்த்தியாகவும் உடை அணிபவரா?.
13) மொத்தத்தில் உங்கள் வீட்டில் ஒரு விஷயத்தைப் பற்றியதில் உங்கள் துணைவரின் முடிவுதான் இறுதியானதா?


நீங்கள் ஆணாய் இருந்து அத்தனை கேள்விக்கும் உங்களது பதில் ஆம் என்றால் உங்களுக்கு பிறக்கும் அத்தனை குழந்தைகளும் ஆண்தான். ஏழு என்றால் முதலில் பிறக்கும்  குழந்தை ஆண்தான். ஏழுக்கும் மேல் ஆம் என்றால் முதலில் பிறக்கும் இரண்டு குழந்தைகளும் ஆண்தான்.
 
 நீங்கள் பெண்ணாய் இருந்து அத்தனை கேள்விக்கும் உங்களது பதில் ஆம் என்றால் உங்களுக்கு பிறக்கும் அத்தனை குழந்தைகளும் பெண்தான். ஏழு என்றால் முதலில் பிறக்கும்  குழந்தை பெண்தான். ஏழுக்கும் மேல் ஆம் என்றால் முதலில் பிறக்கும் இரண்டு குழந்தைகளும் பெண்தான்.


என்ன குழந்தை என்பதை பிறகு பார்ப்போம் முதலில் குழந்தை எப்படி பிறக்கிறது சிலருக்கு ஏன் காலதாமதம் ஆகிறது. பிறப்பதற்கு வழிமுறைகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

 

மேலும் படிக்க...!
பலராலும் தப்பாக உரை சொல்லப் பட்டுள்ள குறள் 140

 http://www.thirukkural.com/search/label/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்.

கலைஞர் உரை:

உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.

 எனது கருத்து:

இந்த உரை கொஞ்சம் சொதப்பலாக இருக்கிறது. ஏனென்றால் "உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழ்வது " என்பது பல நூல்களை கற்றோருக்கு இயல்பானதுதான். பலகற்றும் தெளிந்தவருக்கு தனியாக, உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பற்றி ஏன் சொல்ல வேண்டும். அதைத் தனியாகக் குறிப்பிட்டுக் கூற வேண்டிய அவசியம் வள்ளுவருக்கு  இல்லை, ஆனாலும் வள்ளுவர் ஏன் சொல்கிறார் என்று ஆராய வேண்டும்.

 மு.வ உரை:
உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர். எனது கருத்து: இதுவும் கிட்டத்தட்ட அதேமாதிரியான மழுப்பல்தான். "உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர்" இதுவும் எல்லாருக்கும் தெரிந்த நியாயம்தான் இதைப் போய் தனியாக ஒரு குறளில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

சாலமன் பாப்பையா உரை:
முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.

எனது கருத்து:
இவர் நெருங்கி வந்துவிட்டார். இன்றைய காலகட்டத்திற்கு தகுந்த மாதிரி என்பதை விட வள்ளுவரின் உன்மையான கருத்தை உரையாக எழுதியுள்ளார் . சரியான வார்த்தைப் பிரயோகம். வள்ளுவரே வந்து விளக்கமளித்தது போல் இருக்கிறது.

பரிமேலழகர் உரை:
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார், பல கற்றும் அறிவிலாதார் - பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார். (உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்றும் அக்கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார்.ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல். இவை இரண்டு பாட்டானும், சொல்லானும், செயலானும் வரும் ஒழுக்கங்கள் எல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.)

எனது கருத்து:
வள்ளுவரை உணர்ந்தவர் போல் பொருள் சொல்கிறார். வார்த்தைகளைச் சரியாகப் பொருத்தி உலகத்தோடு ஒட்ட ஒழுகலை கல்லாதவர் எனப் பொருள் கொள்ளும் முறையை காண்பித்தாலும், "உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து", என்று உயர்ந்தோரை இழுக்க வேண்டிய அவசியம் இல்லை . ஆகவே இவரும் கடைசியில் திசை மாறி விடுகிறார்.

 மணக்குடவர் உரை:
அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும் உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார். இஃது ஒழுக்கமாவது உயர்ந்தாரொழுகின நெறியில் ஒழுகுதலென்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலி யுடைத்தென்பதூஉம் கூறிற்று.

எனது கருத்து:
இது சுத்தமான மழுப்பல்தான். "அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும் " என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் அர்த்தப் படுத்துவது மாதிரி இருக்கிறது. நூல் என்பதற்கு வாரியார் ஒரு விளக்கம் சொல்வார். அதாவது தச்சர்கள் பெரிய மரங்களை (தடிகளை) அறுத்துப் பலகை மற்றும் "சட்டங்கள்" எடுப்பதற்கு நூலைப் பயன் படுத்துவர். அதாவது நூலில் சாயத்தை நனைத்து நீளவாக்கில் பிடித்து ஒரு சுண்டு சுண்டினால் நேர்கோடாக அடையாளம் செய்து மரத் தடிகளை அறுத்து சீர் படுத்துவர். அது போல் மனிதனை சீர்படுத்துவதற்கு புத்தகங்கள் என்ற "நூல் " பயன் படுகிறது அதனால்தான் அந்தச் சொல்லாடல் வழக்கில் உள்ளது. ஆகவே நிறைய நூற்களை கற்றாலே அறிவுடையவராகி விடுவர் என வாரியார் சொல்வார். அப்படியெல்லாம் இருக்கும் பொழுது பலநூல்கள் கற்பதினால் அறிவு கிடைக்காது என்பதை வள்ளுவர் ஒத்துக் கொண்ட மாதிரி ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அது போன்ற அறிவு கிடைக்காதவர்கள் இருக்கலாம் அவர்கள் ஆயிரத்தில் ஒருவனாக அல்லது லட்சத்தில் ஒருவனாக இருக்கலாம் ஆனால் அவர்களுக்காக வள்ளுவர் குறள் எழுதியிருக்கமாட்டார். ஆகவே மணக்குடவர் உரையும் செல்லாது  செல்லாது.

உத்தம புத்திரரின் உரை
 ( http://kuralamutham.blogspot.in/2009/11/140.html)
கால, தேச மற்றும் வர்த்தமானம் என்னும் நடப்பிற்கேற்ப, மாற்றங்களுக்கு உட்பட்டு, உடன்பட்டு, அனுபவ அறிவுக் கண்களால் உய்த்துணர்ந்து, நல் ஒழுக்க வழி நின்று நயந்தரும் உயர்ந்தோரைச் சார்ந்து, இணங்கிச் செயலாற்றுதலே உலகோடு ஒத்து வாழுதல் எனும் அறிவுடையோர் வாழும் முறைமையாகும்.

 எனது கருத்து:  உத்தம புத்திரரின் உரையிலும் மழுப்பல் இழையோடுவதைக் காணலாம். "நல் ஒழுக்க வழி நின்று நயந்தரும் உயர்ந்தோரைச் சார்ந்து, இணங்கிச் செயலாற்றுதலே " இதைச் சொல்வதற்கு வள்ளுவர் தேவையில்லை. எல்லா அறநூல்களின் பால பாடமே அதுதானே.

Translation: Who know not with the world in harmony to dwell, May many things have learned, but nothing well. Explanation: Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant.

குறுகச் சொல்லி பொருள் விளங்கச் சொல்லப்பட்டுள்ளது.சரியான முறையில் அர்த்தம் சொல்லப் பட்டுள்ளது.

நிபா: இதெல்லாம் சரி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்.

எனது கருத்து: மிகுந்த அறிவுடையோர் முதல் எல்லோரும் ஏன் இப்படித் தப்பாக அர்த்தம் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? அதாவது தெய்வப் புலவராகிய திருவள்ளுவருக்கு இழுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக தங்கள் பாணியில் சிறிது மழுப்பி, மாற்றி பொருள் கொள்ளச் சொல்கிறார்கள்.

வள்ளுவர் தலை சிறந்த பகுத்தறிவாளர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.ஊழையும் உப்பக்கம் காணாலாம் என்பதிலும், தெய்வத்தான் ஆகாது என்றாலும் விடக்கூடாது என்று சொல்வதாலும் பகுத்தறிவாளர்தான். இன்னொரு புறம் அவரும் ஒன்றல்ல பல இடங்களில் கடவுளை சம்பந்தப் படுத்தி எழுதுவதால் இன்றைய தமிழக பகுத்தறிவுவாதிகளின் கூற்றுப் படி முட்டாளாகவும் கருதப் பட வேண்டியவராவர்.

ஆனாலும் தமிழகப் பகுத்தறிவுவாதிகள் வள்ளுவரைத் தலையில் தூக்கி வைத்து ஆடுமளவிற்கு , அவரது கடவுள் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லையே ஏன்?. கருணாநிதி, வள்ளுவர் கடவுளைப் பற்றி குறிப்பிடும் இடங்களில் எல்லாம் நேரடியாக பொருள் கொள்ளாமல் மழுப்புவதை காணலாம். உதாரனத்திற்கு மூன்று குறள்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

 கலைஞர் உரை:
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

எனது கருத்து:
இங்கு இறைவன் என்ற வார்த்தையைப் பயன் படுத்தாமல் "தலையானவன்" என்று சொதப்புகிறார். இறைவனுக்கு இவரது பாணியில் தலையானவன் என்று புதுப் பெயர் வைக்கிறாரா?. மாற்றுத் திறானாளி என்று பெயர் சூட்டியது போல்.
கடவுளை நம்பினோர் கைவிடப்படுவதில்லை என்பதற்கிணங்க இறைவனை வணங்காதவர்  பிறவிப் பெருங்கடல் நீந்தார், என்ற அர்த்தத்தை எப்படி எல்லாம் குழப்புகிறார்.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
 மிச்சில் மிசைவான் புலம்

கலைஞர் உரை:
விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?.

எனது கருத்து:
இதுவும் ஒரு மாதிரியான மழுப்பல்தான். வள்ளுவர்தான் தெளிவாகச் சொல்கிறாரே "வித்தும் இடல்வேண்டும் கொல்லோ" என்றால் எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்கிறார் வள்ளுவர். ஆனால் கருணாநிதி குழப்புகிறார் "தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?."அப்படி பயன் படுத்தினால் விளைச்சலுக்கு என்ன செய்வான் என்கிற கேள்வி தொக்கி நிற்கிறதே அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.

அதை இப்படிச் சொல்லியிருந்தால் முழுமை பெறும். "விதைநெல்லையும் விருந்தோம்பலுக்கு பயன் படுத்தினால் அது கடவுளுக்கு செய்யும் தொண்டாக நினைத்து செய்வதால் உன் நிலத்தில் விதைக்காமலே விளையும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறார்.

 கலைஞர் மிக மோசமாக உரை எழுதிய குறள் ஒன்று உள்ளது.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

மு.வ உரை: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

 சாலமன் பாப்பையா உரை: அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.

 பரிமேலழகர் உரை: ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று. (ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்.

 மணக்குடவர் உரை: நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று. இந்திரன் சான்றென்றது இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால் அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது.

கலைஞர் உரை: புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப் படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.

எனது கருத்து:

ஆக கருணாநிதி திரித்துப் பொருள் கூறியுள்ளார் என்பது வெளிப்படை. "வழிதவறிச் செல்லும் மனிதனுக்கு சான்றாக இந்திரன் விளங்கி " என்று ஏதோ உள்குத்து வைத்து எழுதியுள்ளார். இயற்றியவரின் வழியில் நின்று  உரை எழுதுவதுதான் முறை. இவருடைய கொள்கைகளை திணித்து   உரை எழுதுவது இயற்றியவருக்குச் செய்யும் துரோகம்.

சரி நமது குறளுக்கு வருவோம்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பற்றிய பழமொழி உண்டு "ஊரோடு பகைக்கின் வேறொடு கெடும்". உலகத்தில் இருந்து ஊருக்கு வந்துவிட்டார்கள்.

இதையே எனது அப்பத்தா வேறுவிதமாகச் சொல்வார்கள். "நண்டு திங்க்கிற ஊருக்குப் போயிட்டா நடுத்துண்டு நமக்கு " அதாவது இது நண்டை உணவாகக் கருதாதவர்களின் மத்திய தமிழ் நாட்டு ஊரில் பேசப் படும் பழமொழியாக யோசித்தால் வள்ளுவர் இந்த விஷயத்தை குறளாக படைக்க எடுத்துக் கொண்ட சிரத்தை தெரியும்.

 மனதுக்கும் சமூகத்துக்கும்  ஒவ்வாத முட்டாள்தனமான காரியமென்றாலும், தேவை கருதி செய்யப் பழகாதவன் அறிவில்லாதவன் என்று தைரியமாகச் சொல்கிறார். ஆனால் உரை எழுதும் இவர்கள் அர்த்தம் சொல்லும் போது ஏன் மழுப்ப வேண்டும்.ஒரு வேளை எல்லாச் சமயங்களிலும் விதி மீறுபவர்கள் தங்களுக்கு சாதகமாக இந்தக் குறளைப் பயன் படுத்தக் கூடாது, என்பதற்காக சான்றோர்கள் அடக்கி வாசிக்கிறார்களா?.

இதை டார்வினின் பரிணாமத்தில் வரும் சூழ் நிலைக்கு ஏற்றவாறு தகவமைத்துக் (ஒட்ட ஒழுகல்) கொள்ளுவதற்கான பாடத்தைச் சொல்லும் குறளாகப் பாவித்துக் கொள்ள வேண்டும்.

இதை ஒட்டிய கதை ஒன்று உள்ளது. புதிதாக திருமணம் ஆன, ஆண் தனது மாமனார் ஊர்த் திருவிழாக் கொண்டாட தனது புது மனைவியுடன் சென்றார்.கோயில் திருவிழாவில் புது மனைவியுடன் கலந்து கொண்டு கடவுளை வணங்கினார். அவ்வாறு வணங்கி வரும் பொழுது அவ்வூரில் உள்ள வழக்கப் படி ஒருமரத்தில் உள்ள தெய்வத்தை கல்லால் எறிந்து கும்பிட வேண்டும் என்று அவரது மாமியார் வீட்டார் சொன்ன பொழுது அவருக்கு இது என்ன பைத்தியக் காரத்தனமாக இருக்கிறது. கடவுள் என்பது வணங்குவதற்குத் தானே அவரைப் போய் கல்லால் அடிக்கலாமா என்று கேள்வி கேட்டு மறுத்து விட்டார். ஆனாலும் கல் எறிய வில்லை என்றால் கெட்டதுதான் நடக்கும் எனவே எறிந்து விடுங்கள் என்ற புது மனைவியின் வற்புறுத்தலுக்காக கல்லை எடுத்தார், ஆனாலும் கடைசி நிமிடத்தில், மனது கேட்காமல் கடவுள் இருப்பதாகக் கருதப் படும் அந்த மரத்தை விட்டுவிட்டு பக்கத்தில் இருந்த மரத்தின் மீது கல்லை எறிந்து விட்டு வீட்டிற்கு வந்தார். வரும் பொழுதே அவருக்கு கண் சரியாகத் தெரியாமல் தட்டுத் தடுமாறி வீடு வந்து சேர்ந்தார். இரவில் தெய்வத்தை நினைத்து வருந்தி "கல்லால் அடித்தவனை எல்லாம் ஒன்றும் செய்யாமல், கல்லால் அடிக்க மறுத்து பக்கத்து மரத்தில் எறிந்த எனக்கு கண் பார்வையை பறித்து இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்தது என்ன நியாயம் தெய்வமே" என அழுது மன்றாடிக் கேட்டார். தெய்வம் கனவில் வந்து "ஏனப்பா நானே எல்லாரும் கல்லால் அடிக்கிறானுக, இவர்களை எவ்வளவு செய்தும் திருத்த முடியாது என்று நினைத்து அவர்களது வழியிலே வழிபடுபவனுக்கு அருளுவோம் என்று பக்கத்து மரத்தில் உட்கார்ந்து எறிபவர்களை கணக்கெடுத்துக் கொண்டிருக்கும் போது என்னை எப்படி நீ குறி பார்த்துக் கல்லால் அடிக்கலாம் " என்று கேட்டது. தெய்வமே நான் வெளியூர்க்காரன் எனக்கு இந்த விவரம் தெரியாதே என்றானாம். இதுக்குத்தான் நிறையப் படிக்கனும் அதிலும் திருவள்ளுவரை நன்றாகப் படி, அதிலும் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பற்றி எழுதியுள்ள குறளை படித்துப் புரிந்து கொள் என்று சொல்லிவிட்டு கண் பார்வையை அருளி விட்டுச் சென்றதாம்.

அப்பா, நாத்திக வாதிகளே நீங்கள் நீதியைப் (குறளைப்) புரிந்து கொண்டால் சரி அதுக்காக கடவுளாம் கண்தெரியாமப் போச்சாம், என்று விவாதத்திற்கு வராதீர்கள். இதுக்குதான் சொல்வது நாத்திகனுக்கு நீதி சொல்லனும் என்றால் கூட முடிவதில்லை. அப்புறம் எப்படி தேறுவார்கள். நீதியை விட்டுவிட்டு கடவுளுக்கு விளக்கம் கேட்பார்கள். அதனால்தான் உங்களுக்கு வித்தியாசமா வேற கதை வைத்திருக்கிறேன்.

இப்படித்தான் ஒரு முறை இரவில் வெகுதூரம் பேருந்தில் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. உட்கார இடமில்லை என்றாலும் பரவாயில்லை நின்று கொண்டெ செல்லலாம் என்று கூட்டம் நிறைந்து வந்த பேருந்தில் பின்புறவழியில் ஏறினேன். எனக்குப் பின்னால் ஒருவரும் ஏறினார். பேருந்தும் கிளம்பியது.நான் பேருந்தில் நோட்டமிட்டேன் ஒரு ஐந்தாறு இருக்கைகளுக்கு முன் ஒரு இருக்கை காலியாக இருந்தது. ஆனால் எனக்கு முன் பத்துப் பதினைந்து பேராவது இருப்பார்கள், அவர்கள் நெருக்கியடித்து நின்று கொண்டிருக்கிறார்கள். மூளை ஒருகணம் யோசித்தது. அவர்களே உட்கார முயற்சி செய்ய வில்லை என்றால் அதற்கு ஒரு முன்கதைச் சுருக்கம் இருக்க வேண்டும் எனவே அவ்ர்களது வழியைப் பின்பற்றி இருப்போம் (உலகத்தோடு ஒட்ட ஒழுகல்) என்று நின்று விட்டேன். ஆனல் எனக்குப் பின்னாடி வந்தவர், அந்தக் காலியாக இருந்த இருக்கையை கண்டு, முண்டியடித்து எனக்கு முன்பாக நின்று கொண்டிருந்த ஆட்களை நெட்டித் தள்ளிவிட்டு அவசர அவசரமாகப் போய் வெற்றிகரமாக உட்கார்ந்து விட்டார்.

சில நொடிகளில் உட்கார்ந்த வேகத்தில் எழுந்து "அட அறிவு கெட்டவனுகளா எவனோ சீட்ல வாந்தி எடுத்து வைத்திருக்கிறான் சொல்லக் கூடாதா? என்று அவருக்கு தெரிந்த வகையில் அந்தக் கருமத்தைப் போக்கி கொண்டிருந்தார். அப்பொழுது நின்று கொண்டிருந்தவர்களில் ஒரு பெரியவர் சொன்னார் நாங்களெல்லாம் உட்காராம கேணத்தனமாக நின்று கொண்டிருக்கிறோம் என்று நினைத்தாயோ? என்றார்.

 நல்ல வேளை அங்கே பல பேருந்துகளில் இருப்பது போல் உட்கார இருக்கை இல்லாமல் ஒட்டையாக இருந்திருந்தால் என்ன நிலைமை என்று யோசித்தேன்.

பிணம் தின்பதை சாஸ்திரமாக ஏற்றுக் கொள் என்கிறான் ஒருத்தன். எப்பொழுது? பேய் ஆட்சி செய்தால், இதுவும் ஒருவகை ஒட்ட ஒழுகல்தான்.

 நன்றி

இரா. சந்திரசேகர்,

 பழனி.

மேலும் படிக்க...!
தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.6

தமிழகத்தின் கடன் 53,000 கோடி என்பது படித்தவர்களையும், முறையான,  நேர்மையான அரசாட்சியில் நம்பிக்கை உள்ளவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கும். ஆனால்  இன்றைய அரசாள்பவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும்  இதெல்லாம் ஜூஜூபி என்று நிரூபித்துவிட்டார்கள். இன்னும் இரண்டு வருடங்களில் தமிழக மின் துறை தன்னிறைவு அடைந்து  மிகுதியான  லாபம் ஈட்டும் துறையாக மாறிவிடும். அதைத் தொடர்ந்து ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கை வலுவடைந்து போராட்டம் வெடிக்கலாம்.

கடந்த ஆண்டில் வீடுகளுக்கு, 8,678 கோடி ரூபாய்க்கு வினியோகிக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப் பட்டுள்ளது. வரும் ஆண்டில் மிதமிஞ்சிய  கட்டண உயர்வால் 20,000 கோடி வருவாய் ஈட்டும்  அந்த அளவிற்கு ஈவு இரக்கமின்றி கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. 20,000 கோடி வருவாய் இருந்தால் 53,000 கோடி கடன் என்பது எளிதான விஷயம்தானே. இதெல்லாம் கிடக்கட்டும். இதை எழுதினால் மனவழுத்தம் அதிகமாகும். ஆகவே நான் யுபிஎஸ் வாங்கிய கதையை பகிர்ந்து கொள்கிறேன்.

மின்வெட்டால் ஒரு நாளைக்கு, 8 மணிநேரம் கணிணி உபயோகம் , மின் விசிறி உபயோகம் இல்லாமல் பொழுதைப் போக்குவது பெரும் பாடாய் இருந்தது. இருந்தாலும் மூன்றில் ஒரு பங்கு மின் உபயோகம் மிச்சமாவதால் அமைதி காத்து ஆறு மாதங்கள் இருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில்  எட்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு என்பது அரசாங்கத்தின் அராஜகமாகத் தெரிந்தது. ஆகவே யுபிஎஸ் வாங்கலாமா அல்லது  போர்ட்டபிள் ஜென்செட் வாங்கலாமா என்று யோசித்தேன். முதலில் நமக்குத் தேவையான மின்சாரத்தின் அளவை கணக்கிட  வேண்டும். அதை எப்படி கணக்கிடுவது.

மின்வாரிய கட்டண கணக்கீட்டு அட்டையைப் பார்த்த பொழுது  சராசரியாக  இரண்டுமாதத்திற்கு ஒரு முறை 400 யூனிட்டுகள் உபயோகிப்பது தெரிய வந்தது. அதாவது ஒரு மாதத்திற்கு 200 யூனிட்டுகள். ஒரு நாளைக்கு சுமார்  7 யூனிட்டுகள் . இதில் பெருந்தீனிக்காரர்களான, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மிஷின், ஃப்ரிட்ஜ், ஹீட்டர் இவைகளை ஒதுக்கி வைத்தாலும், ஒரு நாளில் 8 மணி நேரத்திற்கு, சராசரியாக 2 யூனிட்டுகள் தேவைப் படும்.. அதாவது ஒரு மணி நேரத்திற்கு  (2000/8 +250) 300 வாட்ஸ் டெலிவிரி செய்யக் கூடிய சோர்ஸ் தேவைப்படும். இது ஒரு சராசரி என்பதாலும் சமயங்களில் ஒரே நேரத்தில் 2 ஃபேன்  (60 X 2) , ஒரு கம்ப்யூட்டர் 250  ,2 ட்யூப் லைட்  (2 X 60 ), வேலை செய்ய வேண்டிய சூழல்  என்று கணக்கிட்டால் (120 + 250 120 =490 வாட்ஸ்)  தேவைப்படுகிறது. தேவைப் பட்டால் ஒரு ஐந்து நிமிடத்திற்கு மிக்ஸியை உபயோகித்துக் கொள்ளக் கூடிய வகையிலும் , பாதுகாப்பு மற்றும் தேவையை கருதி 1000 வாட்ஸ் சப்ளை செய்யக் கூடிய சோர்ஸ் வாங்கவேண்டும்.

ஜென்செட்டா அல்லது யுபிஎஸ்ஸா எது பெஸ்ட்.?


1200 வாட்ஸ் ஜென்செட்

முதலில் ஜென்செட் பற்றிய கணக்கீட்டைப் பார்ப்போம்.

ஜென்செட் 500வாட்ஸ்லிருந்து 5000 வாட்ஸ் வரை ரூபாய்  20,000 லிருந்து 70,000 வரை  சந்தையில் கிடைக்கிறது. குறைந்த பட்சம் 1 கேவி(1000 வாட்ஸ்) ஜென்செட் வாங்கினால் சுமார் ரூபாய் 30,000 ஆகும்.

http://www.pricelist.co.in/index.php/office/generators/portable-generators

ஜென்செட்கள், ஒரு யூனிட் தயாரிக்க  எவ்வளவு  எரிபொருள் எடுத்துக் கொள்கின்றன என்பதுதான் மிக முக்கியமான விஷயமாகும்.

A conservative rule of thumb is one gallon of fuel per hour for a 5,000 watt generator.

அதாவது 5000வாட்ஸூக்கு ஒருமணி நேரத்திற்கு ஒரு கேலன் பெட்ரோல் என்பது ஜென்செட்களின் தலையெழுத்து.

அந்த வகையில் பார்த்தால் 1000 வாட்ஸ்க்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் ஒருலிட்டர் எனக் கணக்கிட்டுக் கொள்ளலாம்..

சிக்கனமாக பயன்படுத்தினால் 8 மணி நேரத்திற்கு  குறைந்தது 4 லிட்டர் பெட்ரோல் அல்லது கெரஸின் தேவைப் படும். அதற்கான செலவு  சுமார் 300 ரூபாய் . இந்த ரீதியில் கணக்கிட்டால் ஒரு மாதத்திற்கு 10,000 ரூபாய் எரி பொருளுக்காக செலவிட வேண்டும். மேலும் இயக்கத்தை கட்டுப் படுத்த விவரமான ஆள் தேவை. இரைச்சல், மாசு என்று அதிகப் படியான  கவலைதரும் விஷயங்கள் வேறு உள்ளது. ஆகவே வீட்டைப் பொறுத்தவரை, அதாவது மின்வெட்டு நேரங்களில்  சராசரியாக மணிக்கு 500 வாட்ஸ் உபயோகத்திற்கு ஜென்செட் என்பது ஒரு குவார்ட்டர் அடிக்கிறதுக்கு  ஒயின்ஷாப்பை  விலைக்கு வாங்கிய கதை தான்.

மின்சாரத்திற்கான  இணைப்பு அறவே இல்லாத இடங்களுக்கு வேண்டுமென்றால், ஜென்செட்டை விட்டால் வேறு வழி இல்லை. மேலும் இதில் ஒரு யூனிட் மின்சாரம் அறுபது ரூபாய் ஆகிவிடுகிறது. ஒருமணி நேரத்தில் 100 ரூபாய் வருமானம் பார்ப்பவர்கள் வேண்டுமென்றால் ஜென்செட் வைத்துக் கொள்ளலாம். இது நமக்கு கட்டுப் படியாகாது. ஆகவே அடுத்த ஏற்பாட்டை பார்க்கலாம்.

யுபிஎஸ்ஸா?


லுமினஸ்

பவரால் - மகிந்திரா

சு-கம்






மைக்ரோடெக்
நமது தேவை 1000வாட்ஸ்  கொடுக்கக்கூடிய சோர்ஸ். சந்தையில் 1000 வாட்ஸ்  தொடர்ந்து கொடுக்கக் கூடிய இன்வர்ட்டர் கிட்டத்தட்ட இல்லை எனக் கொள்ளலாம். 850 வாட்ஸ் அல்லது 1500 வாட்ஸ்களில்தான்  கிடைக்கும் இன்வர்ட்டர்களில் 99 சதவீதம் 850 வாட்ஸ்தான் . இதில் குறிப்பிட்டுள்ள வாட்ஸ் என்பது, மிக அதிகபட்சமாக, பாதுகாப்பாக (in the safer side)  ஒரு மணி நேரத்திற்கு இன்வர்ட்டர் வழியாக 850 வாட்ஸ் எடுக்கலாம் என்று அர்த்தம்.

850 வாட்ஸூக்கான இன்வர்ட்டர்  4500 ரூபாயிலிருந்து 5500 ரூபாய் வரை உள்ளது. மின்கலம் 100 ஆம்பியரில் வாங்கினால்  10,000 ரூபாய். ஆக மொத்தம் 15,000 ரூபாயில் முடித்துவிடலாம்.
http://www.priceindia.in/consumer-electronics/inverter-battery-price/

இதில் பிரதானமானது மின்கலம் தான். அதை எப்படி கணக்கிடுவது.சந்தையில் 12 V வோல்ட் மின் கலங்கள்தான்  99  சதவீதம் உள்ளது. நமக்கு தேவையான ஆம்பியரை எப்படி கணக்கிடுவது.?
எனது ஒரு நாளைய தேவை 2 யூனிட்கள் என்று பார்த்தோம் அதாவது 2000 வாட்ஸ். இதை மின்கலத்தின் வோல்ட்டால் வகுத்தால் தேவையான மின்கலத்தின் ஆம்பியர் கிடைத்துவிடும்.  2000 Watts/12 Volt= 166.6AH.

சந்தையில் 100AH, 120AH, 150AH, 165AH, 180AH, 200AH ஆம்பியர்களில் 12 V மின்கலங்கள் கிடைக்கிறது.


லெட் ஆசிட் பேட்டரி  (ஃப்ளாட்)

சீல்ட் பேட்டரி


http://www.brightnpowerups.com/batteries/lead-acid-batteries.html

200(AH) ஆம்பியர் என்று போட்டிருந்தால், 200 ஆம்பியரில் வேலை செய்யும் மின் சாதனம் (லோடு) இணைத்தால் 1மணிநேரம் தாக்குபிடிக்கும் என்று அர்த்தம். அல்லது 1000 ஆம்பியர் லோடு இணைத்தால் 12 நிமிடங்களுக்கு வேலைசெய்யும்.

செய்கூலி, சேதாரம்

12ஓல்ட்7ஆம்பியர்
 

கம்ப்யூட்டர் யுபிஎஸ்ஸின் மின் கலம் 12 வோல்ட் ,7 ஆம்பியர்தான் இதனுடைய மொத்த வாட்டேஜ் 84வாட்ஸ்தான். இதில் செய்கூலி, சேதாரம் போனால் நமக்கு கிடைப்பது 60 வாட்ஸ்தான். கம்ப்யூட்டருக்கு ஒரு மணி நேரத்திற்கு   250 வாட்ஸ் வேண்டும் 60 வாட்ஸ்ஸில் 15 நிமிடம் தான் வேலை செய்யும்.ஒரு வருடம் ஆகிவிட்டால் ஐந்து நிமிடம்தான் வேலை செய்யும்.

 200 ஆம்பியர் மின்கலம்  200 X 12= 2400 வாட்ஸ் கொடுக்கவேண்டும். அதை 230 வோல்ட்டாக மாற்றும் போது அதில் 15% செலவானது (செய்கூலி, ) போக 2000 வாட்ஸ் இருக்கும். அதிலும் முழுவதுமாக சுரண்டி எடுக்கமுடியாது. 10.5V  அல்லது 11 V வோல்ட்க்கு குறையும் வரை எடுக்கலாம். ஆகவே அதில் தங்கியிருக்கும் (சேதாரம்) அந்த இருப்பைக் கழித்துவிட்டால் 1800 வாட்ஸ் நிச்சயம் பயன்படுத்த கிடைக்கும்.

இன்வர்ட்டர் கள்  850 வாட்ஸ், மற்றும்  1500 வாட்ஸில் இருக்கிறது. ஆனால் 1500 வாட்ஸ் (24 Volt) இன்வர்ட்டர் என்று போய்விட்டால்  அதற்கு  இரண்டு மின்கலங்கள் தேவைப் படுகிறது. அதனால் விலையும் (2 X 10,000 = 20000) கூடி விடுகிறது.

நான் கம்ப்யூட்டருக்கு உபயோகிக்கும் யுபிஎஸ்ஸைப் பற்றி யோசித்து அதன் சப்ளை ரேட்டிங்கைப் பார்த்தேன்.. அது 650 வாட்ஸ் என்று போட்டிருந்தது ஆகா இதில் ஒரு 100 ஆம்பியர் சீல்ட் (Sealed) பேட்டரியை இணைத்து விட்டால் போதுமே, ஒரு பேட்டரி என்ன 5000 ரூபாய்தானே என்று கணக்கிட்டேன். எல்லாம் சேர்த்து 7000 ரூபாயில் முடித்து விடலாமே! .பின்னர் அதிக ரேட்டிங்கில் உள்ள கம்ப்யூட்டர் யுபிஎஸ் பற்றி தகவல் எடுத்தேன் 1500 வாட்ஸ் யுபிஎஸ்  2000 ரூபாயில் கம்ப்யூட்டர் விற்பனை யாளர்களிடம் இருந்தது. அதற்கு ஒரு 80+80  ஆம்பியர் சீல்ட் பேட்டரி இரண்டை வாங்கி மாட்டி விட்டால் போதுமே 12,000 ரூபாயில் தேவை நிறை வேறிவிடும்.
http://www.computerwarehousepricelist.com/productlist.asp?CurPage=1 



அறிவின் கணக்கை புத்தி ஏற்க மாட்டேன் என்கிறது. ஒரு வேளை அவர்கள் குறைந்த நேர செயல் பாட்டிற்கு அந்த யுபிஎஸ்ஸை செய்திருந்தால் என்ன செய்வது என்று புத்தி சொல்லியது.  அதுதான் ஒரு வருடத்திற்கான  வாரண்டி இருக்கிறதே தாரளமாக செய்யலாமே என்றது அறிவு. அதெல்லாம் சரி இது பற்றி வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிரார் என்று பார்த்தபொழுது. (ஆஹா வள்ளுவர் யுபிஎஸ் பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறரா  என்று கேட்பது தெரிகிறது. )

உலகத்தோடு ஒட்ட ஒழுகார் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

ஆகவே  எல்லாரையும் போல இன்வெர்ட்டர் வாங்கிக் கொள்வோம் என்று முடிவெடுத்து ஆராய்ச்சியை கைவிட்டேன். கம்ப்யூட்டர் யுபிஸ், பெங்களுரில் கம்ப்யூட்டர் வேர் ஹவுஸில் பலதரப்பட்ட வகைகளில் கிடைக்கும். உங்களுக்கு வசதியும் நேரமும் இருந்தால் செய்து பாருங்கள்.

முடிவெடுத்தவுடன்  இது பற்றி இதே தொழிலில் இருக்கும் நன்பரிடம் சொன்ன பொழுது உங்களுக்கு யுபிஎஸ்தானே கவலையை விடுங்கள் என்று சொல்லிவிட்டு போனவர், அரைமணி நேரத்தில் இன்வெர்ட்டர், பேட்ட்ரி,  எலக்ட்ரிஷியன் என்று ஆட்டோவில் வந்து இறங்கி விட்டார். ஆகா என்னைக் கேட்கவில்லை, அவர்பாட்டுக்கு  மாட்டி விட்டு சென்றார். பணம் (15,000 +500) எப்பொழுது கொடுக்க முடியுமோ அப்பொழுது கொடுங்கள் என்று சொல்லி விட்டுச் சென்றார்.

இதைத்தான் அன்புத்தொல்லை என்பது. நாம் இவ்வளவு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம்.என்ன பிராண்ட் வாங்குவது என்ன பேட்டரி  வாங்குவது என்று யோசிக்கவிடாமல் கொண்டு வந்து மாட்டி விட்டு சென்றார். நன்மைதான் செய்வார் என்றாலும் என்னைப் போன்ற விவரமானவர்களிடம்!! ஆலோசனை செய்ய வேண்டாமா?. வயரிங்கும் ஒரு குறிப்பிட்ட அறைக்கும் மட்டும் யுபிஎஸ் பயன் தரும் வகையில் இருந்தது.

 நமது ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை அதற்குள் நண்பர் கொண்டு வந்து வைத்து விட்டார் ஆனாலும் என்ன  தொடருவோம்.அடுத்து நான் என்ன செய்தேன் தெரியுமா?
தொடரும்...............

இரா.சந்திர சேகர்,
பழனி

மேலும் படிக்க...!


தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றகுறையினால் ஒரு நாளைக்கு 8 லிருந்து 12 மணி நேரம் மின்வெட்டு அமுல் படுத்தப் பட்டது. இதனால் மக்கள் இதை சமாளிக்க வேறு வழியில்லாமல் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக்கப் படுகிறார்கள்.


அந்த வகையில் இராமன் ஆண்டால் என்ன இரவணன் ஆண்டால் நமக்கென்ன என்று எதையும் கண்டு கொள்ளாமல் நடுத்தர மக்கள் தங்கள் வீடுகளுக்கு 10,000 லிருந்து 30,000 வரை செலவு செய்து யுபிஎஸ் (இன்வர்ட்டர்கள்) வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். வியாபாரிகளும், வசதி படைத்தவர்களும் லட்சக் கணக்கில் செலவு செய்து ஜென்செட் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். 


இதில் தமிழக மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் ஏற்படும் சங்கடங்களும், பொருளாதார பின்னடைவுகளும் அரசாங்கத்திற்கு தெரிவதில்லை, அதிகாரிகளுக்கும், யுபிஎஸ் பற்றிய மின்சாதன அறிவும், இதில் வீணாகும் தமிழகத்தின் பணத்தைப் பற்றிய அறிவும் , அக்கறையும் இல்லாமல் போய்விட்டது. புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி என்பது போல் அதிகாரிகள் உள்ளனர். மக்களோ வோட்டைப் போட்டு விட்டு, ஆப்பை பிடுங்கிய குரங்காக விழி பிதுங்கி இருக்கினறனர்.

 எனது நன்பர் "என் மாமன் மின்வாரியத்தில் பெரிய இன்சீனியரா இருக்கார் மின் வெட்டு பத்தி சொல்லியிருந்தா நானும் யுபிஎஸ் பிசினஸ் பண்ணி நாலு காசு பார்த்து இருக்கலாம்" என்று புலம்பினார். அது சரி அவராவது யுபிஎஸ் மாட்டியிருக்காரா என்று கேட்டேன். அவருக்கு ஒருவன் மாட்டி, விட்டு சென்று 5 வருடம் ஆகிறது என்றார்.

 மக்கள் அதிக அளவில் யுபிஎஸ் வாங்குவது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பொழுது ஒரு நிறைவை (Saturation) எட்டிவிட்டது. இதனால் பெரிதும் பயன் பெற்றவர்கள் வட மாநிலத்தவரே. இந்த யுபிஎஸ், ஜென்செட் மற்றும் பேட்டரி அணைத்தும் (99 சதவீதம்) வட மாநிலங்களி லிருந்துதான் தமிழகத்திற்கு வருகின்றது. இதனால்தான் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது.

தமிழகத்தில் மட்டும் 2.24 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். அவர்களில் குறைந்தது 2 சதவீதம் என்று வைத்தாலே சுமார் 5,00,000 பேர் யுபிஎஸ்கள் வாங்கியிருக்கலாம். அதன் மூலம் மக்கள் பணம் சுமார் 1000 கோடி ரூபாய் வீணாகி இருக்கிறது. அதிலும் இதில் பேட்டரிக்கு செலவிடும் பணம் என்பது 3 வருட காலத்தில் குப்பையாகி விடும். அதாவது சுமார் 750 கோடி 3 வருடங்களில் குப்பையாகிவிடும். பாக்கி 250 கோடியும் 3 வருடங்களில் குப்பையாகி விடும்.



இதுவே 5 சதவீதமாக இருந்தால் 2500 கோடிரூபாய் மக்கள் பணம் செலவாகி இருக்கும். இதில் ஜென்செட் நிறுவிய வகையில் சுமார் 2500 கோடி செலவாகியிருக்கும். அரசாங்கத்தால் மக்களுக்கு குத்து மதிப்பாக 5,000 கோடி ரூபாய் மின்சாரத்திற்காக அதிகப் படியாக செலவாகி இருக்கலாம்.


சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதற்கிணங்க யுபிஎஸ் ஒன்றும் இலவசமாக வேலை செய்யாது. அந்தக் காலத்தில் நெல் அறுவடை செய்பவர்களுக்கு நெல்தான் கூலியாகக் கொடுக்கப் படும், அது போல் யுபிஎஸ், பேட்டரியை சார்ஜ் செய்யும் பொழுதும் , பேட்டரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யும் பொழுதும் 15+15=30 சதவீதத்தை கூலியாக எடுத்துச் சாப்பிட்டு விடும். அது மட்டுமில்லாமல் அதை 24 மணிநேரமும் மின்சாரம் வருகிறதா இல்லையா , வரவில்லை என்றால் மாற்றிக் கொடுக்கும் வாட்ச் மேன் வேலை பார்க்கச் சொல்வதால் அதற்கும் கூலி தரவேண்டும்.

லோகத்தில் (தமிழகத்தைத் தவிர)எதுவும் இலவசமா கிடைக்காது என்பதை கார்னாட் தொடங்கி ஐன்ஸ்டீன் வரை தெளிவா எடுத்துச் சொல்லி யிருக்கிறார்கள் . அது தெரியாம மக்களுக்கு யுபிஎஸ் வாங்கிக் கொடுக்கலாம் என்று ஒரு மந்திரி சொன்னாராம்.

சென்ற வருடம் 1634 கோடி யூனிட்டுகள் மக்களுக்கு வினியோகிக்கப் பட்டுள்ளதாம். இந்த வருடம் 2000கோடி யூனிட்டுகள் செலவாகலாம். இதில் ஒரு 10 சதவீதம் யுபிஎஸ் மூலம் செலவழிப்பதாலும், அந்த பத்து சதவீதத்தில் 30 சதவீதம் என்பது சுமார் 70 கோடி யூனிட்டுகள் வெட்டியாக யுபிஎஸ் சாப்பிட்டு விடும். ஏற்கனவே நிறுவிய வகையில் 5000 கோடி (செலவினம்1), மக்கள் பாக்கெட்டிலிருந்து செலவழிக்கப் பட்டுள்ள நிலையில், யுபிஎஸ்கள் தின்று தீர்த்த வகையில் கணக்கு தொடர்கிறது. அதன் மதிப்போ வருடத்திற்கு 350 கோடி (செலவினம்2) ரூபாயாகும். இதுவும் மக்கள் தலையில்தான் விழுகிறது. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்ற கதையா எதையும் தாங்கும் இதயம் கொண்ட தமிழன் இருக்கவே இருக்கான்.

 இந்த 5,00,000 யுபிஎஸ்கள் நாள் முழுவதும் 24 மணிநேரமும் இயக்கத்தில் (வாட்ச் மேன் வேலையில்) இருந்தால் தான் அவை பயன்படும். அவை ஒவ்வொன்றும் ஒருமணி நேரத்திற்கு சுமார் 30 வாட்ஸ் மின் சக்தியை செலவழிக்கும். இதனால் ஒரு வருடத்திற்கு

(500,000 யுபிஎஸ்கள்X 24மணி X30வாட்ஸ், X 360நாட்கள்)/1000 =11,52,00,000 யூனிட்டுகள்.

11,52,00,000 யூனிட்டுகள் X 5.30ரூபாய்=61,05,60,000

சுமார் 60 கோடி(செலவினம் 3)ரூபாய் வெட்டித் தனமாக செலவு செய்யப் படுகிறது.

 இதனால் மக்களின் பணம் சுமார் 60 கோடி ரூபாய் ஒரு வருடத்திற்கு வீனாக செலவழிக்கப் படுகிறது. ஆக மொத்தத்தில் 3 வருடத்தில் 6200 கோடி (செலவினம் 1+(செலவினம் 2 +செலவினம் 3)*3 ) ரூபாய் எந்த விதமான உபயோகம் இல்லாமல் அதிகாரிகளின் மெத்தனத்தால் மக்களால் தண்டமாக செலவழிக்கப் படுகிறது. அதாவது ஒவ்வொரு தமிழனிடமும் சுமார் 1000 ரூபாய் பிடுங்கப் பட்டுள்ளது.

இதில் நான் ஏன் அதிகாரிகளை குற்றம் சொல்கிறேன் என்றால் யுபிஎஸ் என்பது மின்சாரத்தை தயாரித்துக் கொடுக்கும் சாதனம் என நினைத்துக் கொண்டார்களோ என்னவோ. யுபிஎஸ்ஸின் பயன்பாட்டால் ஏற்கனவே செலவழித்துக் கொண்டிருக்கும் மின்சாரத்திற்கு அதிகமாக 30 சதவீதம் மின்சாரத்தை தண்டம் கட்டி, மாதம் 500 ரூபாய் யுபிஎஸ், மற்றும் பேட்டரி தேய்மானச் செலவுடன் யுபிஎஸ் மூலம் மின்சாரம் எடுக்கிறார்கள் என்பதை மக்கள் வேண்டு மென்றால் அறியாமல் இருக்கலாம் ஆனால் மின்துறை பொறியாளர்களுக்குத் தெரியவில்லை என்றால் யாரைச் சொல்வது. இதையெல்லாம் அதிகாரிகள் முன்கூட்டியே, அதற்கான சரியான முதலீடு மற்றும் திட்டம் என அறிவுறுத்தி செயல் பட்டிருக்க வேண்டும்.

 மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல். ஆனால் படிக்காமல் பதவிக்கு வருகிற மந்திரிக்கு வரப் போகிற கமிஷன் தானே தெரியும் வேறென்ன தெரியப் போகிறது. படிச்சவங்களே பாட்டைக் கெடுக்கும் போது படிக்காதவர்கள் கெடுப்பதை பற்றி சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. படித்தவன் , ஒழுக்கம் உள்ளவன், நாட்டுப் பற்று உள்ளவன் அரசியல் வாதியாகவும் அதிகாரியாகவும் வர வேண்டும், அப்பொழுதுதான் நாடு வளமிக்கதாகவும், மக்கள் சந்தோஷமாகவும் இருக்க முடியும்.

நன்றி.

நிபா:  எல்லாத் தொடரையும் அரையும் குறையுமா முடித்த மாதிரி இதையும் முடித்துவிட்டீர்களா?

நான்: இதில் என்ன குறை உள்ளது?

நிபா: யுபிஎஸ் யின் அளவு என்ன? யாருக்கு எவ்வளவு தேவை ,அதன் பட்ஜெட் என்ன எப்படி நிறுவுவது.எங்கு வாங்கலாம்? போன்ற விஷயங்கள் இல்லையே

நான்: விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் என்ற கதையா இருக்கு, அதை ஏன் வாங்கக் கூடாது வாங்கினால் தமிழனுக்கு எவ்வளவு நஷ்டம் என்று விலாவாரியா எழுதிவிட்டு அதை வாங்குவது எப்படி என்று நானே எழுதலாமா? படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவில் என்ற கதையாகிவிடாதா?

நிபா: ஓஹோ நீ எதுக்கு உன் வீட்டிற்கு வாங்கி மாட்டியிருக்கே? ஊருக்குத்தான் உபதேசமா?

நான்: அதனுடைய நிறை குறை பற்றி எழுத வேண்டுமென்றால் வாங்கித்தானே ஆகவேண்டும்.

நிபா: உன்னைப் போல் நிறை குறை ஆராய்ச்சி உள்ளவர்களுக்காவது பயன்படும் விதமாக எழுதலாமில்லையா?

நான் : நிறையப் பேர், நிறைய எழுதிட்டாங்க அதுவுமில்லாமல் மின்வெட்டும் தீர்ந்து விட்ட இந்த நேரத்தில் வாங்கச் சொல்லி தண்டம் இழுத்து வைக்கக் கூடாது.மந்திரி வேறு சொல்லிவிட்டார் இன்னும் இரண்டு மாதத்தில் மின் வெட்டு தீர்ந்துவிடும் என்று.

நிபா: யோவ் ரொம்ப பிகு பண்ணாதே எல்லோரும் எழுதுவதற்கு மேட்டர் இல்லாமல் இருக்கும் பொழுது மாதத்திற்கு ஒரு பதிவு எழுதற உனக்கு ஒரு மேட்டர் சொன்னா எழுது. நீ எப்படி யோசித்து வாங்கினாய் என்ற கதையை  எழுது.

நான்: மேட்டர் இருக்கு, நேரம் இல்லை. கடந்த ஒரு மாதமாக சென்னை மதுரை, பழனி, திண்டுக்கல் என்று சுற்றியதோடு மட்டுமில்லாமல் ஒருவாரத்தில்  காரோட்டப் பழகினது என்று பல விஷயங்களால் நேரமே கிடைக்கவில்லை. இதில் விண்டோஸ் 7 , ரிப்பேரான ஹார்டு டிஸ்க் என்று பல பிரச்னைகள் இதெல்லாம் எழுதுனா என்னவாகும்.சரி பார்ப்போம்., 


 இரா.சந்திர சேகர்,
 பழனி.

மேலும் படிக்க...!
தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.4
அல்லது
இண்டக்சன் ஸ்டவ்

செவ்வாய் கிரகத்திற்கு மனிதன் சென்றால், அவனுக்கு தேவைப் படும் ஆக்ஸிசனை, மின்சக்தியினால் தயாரிக்க உருவாக்கப் பட்ட தொழில் நுட்பத்தை நாசா ஓரங்கட்டி விட்டது. அதை நமது நண்பர் ஸ்ரீதர் மாற்றி யோசித்து, ஆக்ஸிஸனை கொடுத்து அதிலிருந்து மின்சக்தியை தயாரிக்க பயன்படுத்தி விட்டார்.  உலகம் போற்றும் உன்னத கண்டு பிடிப்பாகி விட்டது. சந்தேகமில்லாமல் இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டு பிடிப்பு என்றே கூறலாம். இந்த விடியோவில் ஸ்ரீதர் கையில் வைத்திருக்கும் புளூம்பாக்ஸ் ஒரு அமெரிக்க வீடு அல்லது இரண்டு ஐரோப்பிய வீடு அல்லது , நான்கு இந்திய  வீட்டிற்கு மின்சக்தி அளிக்கக் கூடியதாம். ஆயிரக்கணக்கான சோலார் பேனல் வைத்து தயாரிக்க கூடிய மின்சக்தியை ஐந்தே ஐந்து புளூம் பாக்ஸ் மூலம் தயாரிப்பதையும் பாருங்கள். நல்ல விஷயம் நாலு பேரைச் சென்றடைவதற்கு நாற்பது முறை கூறினாலும் தப்பில்லை என்பதால், சென்ற பதிவிலும் இணத்திருந்தேன். அதில் பார்க்காதவர்களுக்காக இங்கும் பதிவிட்டுள்ளேன்.





Breaking News

புதிய மின்தடம் அமைப்பதில், தனியார் மின் நிலையத்திற்கு ஆதரவான ஒழுங்குமுறை ஆணைய உத்தரவை, மின்சார தீர்ப்பாயம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. விவரங்களுக்கு கீழே சுட்டி கொடுத்துள்ளேன் தட்டிப் பார்க்கவும். இது போல் பெட்ரோல் விலை ஏற்றத்திற்கும் ஒரு குட்டு வைத்தால் நன்றாக இருக்கும். அங்கும் இதே பிரச்னைதான்.

 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=473365

Breaking voice

"என்னய்யா இது கதையா இருக்கு, தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம் என்று ஆரம்பித்து மின்வெட்டை முடித்து விட்டு யுபிஎஸ்க்கு வருவீங்கன்னு பார்த்தா மிக்ஸி, ட்யூப் லைட், அடுப்பு, கிரைண்டர் ன்னு போய்க்கிட்டே இருக்கீங்க. விட்டா ஜீரோ வாட்ஸ் பல்புன்னு ஆரம்பிச்சுருவீங்க போல இருக்கு. எப்ப யுபிஎஸ்ஸூக்கு வரப் போறீங்க அதுக்கு முன் மின்வெட்டும் தீர்ந்து யுபிஎஸ்க்கு வேலை இல்லாம போயிரும்."

 ஒன்னுமில்லைங்க இது ஃபோர் கிரவுண்ட் வாய்ஸ்தாங்க. நேருக்கு நேர் பார்த்து நம்ம நிபா .கேட்டுட்டார்.

 நல்ல வேளை ஞாபகப் படுத்தினார், ஜீரோவாட்ஸ் பல்பை பற்றி, அதையும் விடப் போறதில்லை. ஆனா அதுக்குன்னு ஒரு பதிவு தனியா போடறது ரொம்ப டூமச் ஆயிரும். இந்த ஜீரோ வாட் பல்புன்னு வெட்கமில்லாம சொல்லியே விக்கிறார்கள் நாமும் வெட்கமில்லாமல் அந்தப் பெயரைச் சொல்லித்தான் வாங்க வேண்டியதிருக்கு. உண்மையிலே ஜீரோ வாட் பல்பு 15 லிருந்து 20 வாட்ஸ் எடுத்துக் கொள்ளக் கூடியது. அதைத் தவறுதலாக ஜீரோ வாட் என்று உபயோகத்தில் பயன் படுத்துகிறோம்.

கடையில் போய் "கம்ப்யூட்டர் சாம்பிராணி "என்று சொல்லிக் கேட்டு, வாங்க கேவலமாத்தான் இருக்கு என்ன பன்றது, அதை பெயராக்கி விட்டார்கள். ஆனாலும் நான் இப்பொழுதெல்லாம் "சாம்பிராணி வில்லை "என்றுதான் சொல்லுகிறேன்.

நிபா : பொய்,பொய் போனவாரம் வெள்ளிக்கிழமை கூட நீ கடையில் கம்ப்யூட்டர் சாம்பிராணி என்று சொல்லித்தானே வாங்கினாய்?

நான்: யோவ் நான் முதலில் வில்லை என்றுதான் சொன்னேன் கடைக்காரருக்கு  விளங்கவில்லை, அதனால்தான் அப்படி சொல்ல வேண்டியதாயிற்று

மின் வெட்டை பற்றி சொல்லிவிட்டால் மட்டும் போதாது. அதிலுள்ள மின் சிக்கனம், மின் சேமிப்பு ஆகியவற்றைப் பற்றிப் பேசும் போது கண்டிப்பாக மின் சாதனங்களைப் பற்றி எழுதித்தான் ஆக வேண்டும். மேட்டரை விட்டு விலகிப் போவது போல் தோன்றினால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.

வினோத் குமாரின் கேள்வி : இண்டக்சன் ஸ்டவூ நல்ல கண்டுபிடிப்பாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில்... அது காந்தத்தை பயன்படுத்துது.. காந்தத்தால் செறிவூட்டப்பட்ட உணவு உடல் நலத்துக்கு கேடுன்னு கேள்விப்பட்டேன்... ?

நான்: அதெல்லாம் கிடையாது. நமது மூளை கூட எலக்ட்ரான் நியூரான் சமாச்சாரம்தான் அதற்காக நம்மை முழுமையாக காந்தத்தால் இயக்க முடியாதல்லாவா?. நாம் சமைக்கும் உணவு ஃபெரோ மெட்டாலிக் (Ferro metallic) கலவை அல்லது சம்பந்தம் இருந்தால் தான் காந்தத்தால் செறிவூட்டமுடியும். அதுமட்டுமில்லாமல் ஃபெரோ மெட்டாலிக் ஆக இருந்தால் சட்டியிலிருக்கும் போதே கருகிவிடும். அது ஒரு மாதிரியான மின்னோட்டம்தான் அதற்கும் காந்த சக்திக்கும் தொடர்பு இல்லை. அதையும் மீறி ஏதாவது இருந்தால் அது கணக்கில் கொள்ளத் தக்கதல்ல (Negligible) என்பது என் அபிப்பிராயம்.


இண்டக்சன் ஸ்டவ்


 என்னைக் கவர்ந்த மின்சாதனங்களில் இண்டக்சன் ஸ்டவ் உம் ஒன்று. மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பு.ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய சாதனம். இதனுடைய சிறப்பையும், பெருமையையும் சொல்லி முடியாது. இதை உபயோகித்த பெண்களுக்குத் தான் தெரியும்.

மற்ற நடைமுறையில் உள்ள மின்கம்பிச் சுருள் அடுப்புகளைவிட மின்காந்த அடுப்பு எனப் படும் இண்டக்சன் ஸ்டவ் (85% ) அதிக சக்தி மாற்றம் (The efficiency of energy transfer ) கொண்டது. அதாவது நாம் கொடுக்கும் மின்சக்தியில் 85 சதவீதத்தை நமக்கு முழுமையாக பயன் படுத்தக் கூடிய வெப்ப சக்தியாக மாற்றிக் கொடுக்கக் கூடியது.

ஆனால் மின்கம்பிச் சுருள் அடுப்புகள் 60 லிருந்து அதிகபட்சமாக 70 சதவீதம் சக்தி மாற்றும் திறமை கொண்டவை. எரிவாயு அடுப்புகளோ அதை விட மிகவும் குறைவு, வெறும் 40% சக்தி மாற்றம் தான் கொடுக்கும். இவை இரண்டுமே முதலில் பாத்திரத்திற்கும் அடுப்புக்கும் இடையில் உள்ள காற்றை சூடேற்றி, அந்தக் காற்றின்  வெப்பத்தின் மூலம்  முழுப் பாத்திரத்தையும் சூடேற்ற வேண்டும். பின்னர் பாத்திரத்தின் சூடு உணவை வேகவைக்க வேண்டும். ஆனால் இண்டக்சன் ஸ்டவில் நேரடியாக பாத்திரத்தின் அடிப்பாகம் மட்டும் சூடேற்றப் படுகிறது.  கொடுக்கும் சக்தி அப்படியே உபயோகப் படுத்தப் படுகிறது.

இண்டக்சன் அடுப்பு ரூபாய் 1300லிருந்து 5000 ரூபாய்வரை கிடைக்கிறது. இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளது. ஒரே ஒரு காயில் மற்றும் சில எளிய பொருட்கள் உள்ளதால் விலை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் இதன் பாகங்களைப் பற்றி அறிந்து கொள்ள கீழே கொடுக்கப் பட்டுள்ள சுட்டியை தட்டிப் பார்க்கலாம் . ஏனென்றால் அடுப்பே 1500 ரூபாய்தான் அது தெரியாமல் சிலர் 2000 ரூபாய் ரிப்பேருக்கு செலவு செய்வார்கள். அட்லீஸ்ட் அதன் பாகங்களை தெரிந்து கொண்டால் கூட போதும்.


மேலும் விவரங்களுக்கு
 http://imajeenyus.com/electronics/20060908_induction_cooker/index.shtml

 http://en.wikipedia.org/wiki/Induction_stove

மேலும் இந்த தொழில்நுட்பத்தால் என்னென்ன விதமான ஹீட்டிங் முறைகள் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.ஒரு கம்பிச் சுருளில் மின்சாரம் பாயும் பொழுது அதன் அருகாமையில் ஒரு வித மின்காந்தத் தூண்டல் (Edddy current) ஏற்படுகிறது. அந்தத் தூண்டலுக்கு அருகாமையில் சிக்கும் இரும்பு சம்பந்தப் பட்ட உலோகங்கள், அதற்கு ஒரு வித பயங்கரமான தடையை ஏற்படுத்துவதால் வெப்பமடைகிறது.

 http://www.ameritherm.com/

காலம் கலிகாலம் ஆகிவிட்டது. எல்லாம் தலைகீழாக நடக்கிறது. இந்த அடுப்பில் ஒரு எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. அது என்னவென்றால் " பாத்திரம் அதிக வெப்பமடைந்தால் அதிலிருந்து வெப்பம் அடுப்புக்கு வந்து விடும், ஆகவே அடுப்பு லேசாக சுடலாம்." இப்பொழுது நம்புகிறீர்களா கலி முற்றிற்று என்று. எப்பொழுதும் அடுப்பிலிருந்துதான் வெப்பம் பாத்திரத்துக்குப் போகும் ஆனால் இண்டக்சன் அடுப்பில் மட்டும் பாத்திரத்திலிருந்து  வெப்பம் அடுப்புக்கு செல்லுமாம்.

எச்சரிக்கை
 இண்டெக்சன் அடுப்பு எந்த இடத்திலும் சுடாது.ஆனால் வைக்கும் பொருட்களை சூடேற்றும் திறமை கொண்டது. நெருப்பின் அபாயம் அற்றது. தீச் சுவாலைகள் இல்லாததால் எதிலும் தீப்பற்றாது. மிக விரைவில் சூடேறக் கூடியது. சீரான வெப்பக் கடத்தல் கொண்டது. ஆபத்தில்லாதது. மின் அதிர்ச்சி கொடுக்காது. எளிமையான, அதிநுட்பமான கன்ட்ரோல் கொண்டது.எளிதில் எடுத்துச் செல்லும் அளவிற்கு சிலிம்மானது. எடை குறைவானது. பெண்களூக்கேற்ற அடுப்பு இதுதான். ஸ்டவ் வெடிப்புக்கு இனி வழி இல்லை.

மிகவும் அறிவுள்ளது, சொன்னபடி செய்யக் கூடியது. ஆமாம் பாத்திரத்தை எடுத்து விட்டால் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும். குறிப்பிட்ட நேரத்திற்குள் வைத்து விட்டால் மீண்டும் ஆன் செய்து கொள்ளூம். பாத்திரம் கருக்காது. பாத்திரத்திலிருந்து சிதறி விழும் பொருட்கள் சூடேறாமல் இருப்பதால் அடுப்பை சுத்தம் செய்வது எளிது.குறிப்பிட்ட நேரம் வரை சூடேற்றச் சொல்லி விட்டு மற்ற வேலைகளில் கவனம் செலுத்தலாம்.. நேரம் செட் செய்து விட்டால் தானாகவே அந்த செட் செய்த நேரம் வந்தவுடன் ஆப் ஆகிவிடும்.

மைக்ரோ வேவ் ஒவன் கூட 65 சதவீத சக்தி மாற்றுத் திறன் கொண்டதுதான். அதிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சூடேற்ற முடியாது. ஆகவே திறனை மதிப்பிடும் போதும் இண்டக்சன் ஸ்டவ்தான் சிறந்ததாகவும் சிக்கன மானதாகவும் இருக்கிறது. பொதுவாக 1800 வாட்ஸ் மற்றும் 2000 வாட்ஸ் என இரண்டு விதமான வாட்ஸ்களில் கிடைக்கிறது. இங்கே காட்டப் பட்டுள்ள பட்டர் பிளை (ஸ்டாண்டர்டு) 1800 வாட்ஸ் அடுப்பின் இன்றைய (01-05-20012) விலை ரூபாய் 1700 தான். அதாவது சுமார் ஒரு வாட்ஸ் ஒரு ரூபாய்தான்.

பட்டர் பிளை (ஸ்டாண்டர்டு) 1800 வாட்ஸ்
                                           
இதிலுள்ள ஒரே ஒரு பின்னடைவு இதில் இரும்பு சம்பந்தப் பட்ட (எவர்சில்வர்) பாத்திரங்கள்தான் உபயோகிக்க முடியும். அலுமினியம், ஹிந்தாலியம், தாமிரப் பாத்திரங்கள் சூடேறாது. பாத்திரங்களுக்கான தேவை ஏற்படும் போது அவை வியாபாரத்திற்கு வந்துவிடும். உதாரணமாக ஹிந்தாலியம் குக்கரின் அடிப்பாகம் மட்டும், எவர்சில்வர் தகட்டுடன் ஒட்டப் (Sand-witched) பட்டு இப்பொழுது கிடைக்கிறது.

எவர்சில்வர் தகடு ஒட்டப்பட்ட ஹிந்தாலியம் குக்கர்
எவர் சில்வர் பாத்திரம் பயன் படுத்தலாம், அடிப்பாகம் கெட்டியாக இருந்தால் நல்லது. அடுப்பின் செராமிக் பிளேட்டோடு சமமாக  பொருந்தும் வட்டமான பாத்திரம் தான் சரியான தேர்வாக இருக்கும்  (உங்களுக்கு தேவையில்லாத புள்ளிவிவரம்.செராமிக் பிளேட்டில் இருந்து பாத்திரம் 5 எம்எம் வரை கூட விலகி இருக்கலாம்..)

எச்சரிக்கை:
அடுப்பிற்கும் பாத்திரத்திற்கும் இடையில் எந்த விதமான சிறிதோ, பெரிதோ இரும்பு சம்பந்தப் பட்ட எந்தப் பொருளும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அதுதான் முதலில் சூடேறும் பின் அதிலிருந்து தான் பாத்திரத்துக்கு சூடு பரவும் அப்போது சக்தி மாற்றுத் திறன் 85 லிருந்து குறைந்து 5 அல்லது 10 சதவீதமாகி விடும். இடையிலுள்ள இரும்பு பழுத்து விடும். ஆகவே அந்த மாதிரி ஆராய்ச்சியில் இறங்காதீர்கள்.

என்னைக் கேட்டால்:
எரிவாயுவை சிலிண்டரில் அடைத்து அதை விநியோகம் செய்வதை விட அந்த எரிவாயுவை குழாய் மூலம் விநியோகித்து மாவட்ட அளவிலான தேவைக்கு, மின்சாரம் தயார் செய்யும் நிலையங்களை நிறுவலாம். இந்த மின்சாரத்தில் இண்டெக்சன் ஸ்டவ்வை உபயோகிக்கலாம். இதனால் வெடிப்பினால் ( Explosion) ஏற்படும் விபத்து மற்றும் பொருட் சேதம் தவிர்க்கப் படலாம், மின் அதிர்ச்சி (Electric shock) கொடுக்கும் மின் அடுப்புகளை தவிர்க்கலாம். தீச்சுவாலையற்றதாக (Flame less) இருப்பதால் விபத்து இல்லை விலை மதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப் படுகிறது. , மின் பகிர்மான இழப்பாகிய (Transmission Loss ) 8,000 கோடி ரூபாய் வருடத்திற்கு மிச்சமாகும், மற்றும் கூடுதலான சக்தி மாற்றும் திறமை (Energy transfer efficiency. 85% ) கிடைக்கிறது. ஆகவே இதைப் பற்றிய பரிசார்த்தமான நடைமுறை அறிக்கை (Feasibility report) தயார் செய்து ஆராயலாம்.

....................தொடரும்.

நிபா: ஆமா பட்டர் பிளைக்கு ஏதும் காசு வாங்கினாயா?  அடுத்து யுபிஎஸ் பற்றித் தானே?
நான்: உனக்குத் தெரியாமலா? படுத்தாதய்யா அடுத்து யுபிஎஸ் தான்.ஆனால்..

தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.1
தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.2
தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.3

இரா. சந்திரசேகர்.
பழனி.


மேலும் படிக்க...!
மத்திய அரசின் பொய்யும் புரட்டும்.

எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பதெல்லாம் சுத்தப் பொய். 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது. 2006-07 முதல் 2009-10 வரையிலான 4 நிதியாண்டுகளில் இந்த 3 நிறுவனங்களும் ரூ. 36,653 கோடி லாபம் அடைந்திருக்கின்றன. மத்திய அரசுக்கு ரூ.4,73,000 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. விற்பனை வரி போன்றவை மூலமாக மாநில அரசுகளும் ஆதாயம் அடைகின்றன.

இந்த 4 நிதி ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களுக்காக வழங்கப்பட்ட மொத்த மானியமே ரூ.26,000 கோடிதான். மொத்த வருவாயில் இது 6 சதவீதத்துக்கும் குறைவு. நஷ்டம் ஏற்படுவதாக, அரசும், எண்ணெய் நிறுவனங்களும் ஒப்பாரி வைத்தாலும், அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது என்கிற பூசணிக்காயை  எந்த சோற்றுக்குள்ளும் மறைக்க  முடியாது.

http://rsyf.wordpress.com/2012/05/25/petrol-income-2/

தினமணியில்கடந்த 2011 அக்டோபர் மாதம்  பதிவிடப் பட்டது. அரசின் தந்திரக் கணக்கு  First Published : 20 Oct 2011 02:16:41 AM IST

அரசின் தந்திரக் கணக்கு

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2010-11ம் ஆண்டுக்கான அறிக்கையில், அந்த நிறுவனத்துக்கு வரிப்பிடித்தங்கள் போக ரூ.7,445 கோடி லாபம் அடைந்திருப்பதைக் காண முடியும்.

அம்பானி குடும்பம் கஷ்டப்பட கூடாதுன்னு நினைக்கும்  மத்திய அரசு பெட்ரோல் விலையை ஏற்றி விட்டது. நம்ம மத்திய அரசுக்கு மக்கள் கஷ்டப் படுவதை பற்றி கவலை இல்லை. அம்பானி மல்லையா போன்றவர்கள் கஷ்டப் படக் கூடாதுன்னு அவர்களுக்காகவே ஆட்சி நடத்தும் நம்ம  மதிப்புக்குரிய பொருளாதார மேதை மன்மோகன்சிங்கிடமும் அன்னை சோனியாவிடமும் விலையேற்றத்தை தவிர வேறு என்ன எதிர் பார்க்க  முடியும்.

http://kalamarudur.blogspot.in/2012/05/blog-post_25.html

இந்த நிறுவனம் அரசுக்கு லாப ஈவுத் தொகையாக மட்டும் ரூ.39,658 கோடியைக் கொடுத்திருக்கிறது. பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களும் பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டியிருக்கின்றன.



தற்பொழுது பெட்ரோல் விலை ஏற்றம் என்பது உலக மகா மொல்லமாரித்தனமாகும். உலகில் பெட்ரோல் விலை தற்பொழுது கடந்த நான்கு மாதங்களில் இருந்ததை விட  மிகவும் குறைவாக உள்ளது. மேலும் குறைந்து கொண்டே இருக்கிறது. கீழே கொடுத்துள்ள சுட்டியில் கச்சா எண்ணெயின் விலையை பலவிதமாக அறிந்து கொள்ளலாம். கடந்த 5 வருடத்திற்கு அல்லது கடந்த ஒரு வருடத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது கடந்த மூன்று மாதங்களில் ஏற்பட்ட மாற்றம் என அறிந்து கொள்ளலாம்.

கடந்த ஐந்து வருடங்களுக்கான  விலை விவரம்
கடந்த மூன்று மாதங்களுக்கான விலை விவரம்

http://oil-price.net/dashboard.php?lang=en

இந்த 2008 ஜனவரியில்  உலகச் சந்தையில்  பேரல் 140 டாலர் விற்றபொழுது கூட இவ்வளவு விலை ஏற வில்லை. ஆனால் தற்பொழுது 90 டாலர்தான் விற்கிறது. இந்த நேரத்தில் ஏற்றுவது ஏன் என்று விளக்கத் தெரியாத பொருளாதார மேதை மன்மோகன் சிங் மத்திய அரசு விலையேற்றத்திற்கு பொறுப்பல்ல என்று கூறுவது முழித்திருக்கும் போது முழியை தோண்டும் கதைதான்.

அதிலும் மத்திய மந்திரியும், டிவிச் செய்திகளில் உலகச் சந்தையில் விலையேற்றம் என்று கூசாமல் பொய் பேசுகிறார். இதைக் கேட்பதற்கு ஆள் இல்லை. இந்த மீடியாக்கள் ஜால்ரா அடிச்சுக்கிட்டு உலகச் சந்தையின் விலையை  அறிவிக்காமல் இருப்பது ஏன்?. அவர்களுக்கு தெரியாதா?

இதே நிலைமை நீடித்தால், இந்தியா பொருளாதாரம் சரிவில் சிக்கி, வரலாற்றில் பேசப் படும் அளவிற்கு சீர் கெடப் போகிறது .இன்று கிரீஸூக்கு ஏற்பட்ட நிலை தான் நாளைக்கு நமக்கும்.

நமது முதல்வர் சொல்வது போல்  மக்கள் கலகம் செய்து ஆட்சியை இறக்கவேண்டிய சூழ்நிலை உருவாகப் போகிறது. அதாவது நாட்டில் கலகம் ஏற்படப் போகிறது என்பதை நாசூக்காக சொல்கிறார்.

பெட்ரோல் விலையேற்றம் என்பது ஏதோ ஒரு ரூபாய் அல்லது 2ரூபாய் ஏறுவது இயல்பு ஆனால் தற்பொழுது 7.50 காசு என்பது  இமாலய திருட்டுத்தனம் . மக்கள் என்று உணரப் போகிறார்களோ அன்று அரசியல் வாதிகளுக்கு ஆப்பு அடிக்கப் போகிறார்கள்.ரூபாய் மதிப்பு குறைவினால் பயன் அடைவதும் ஸ்விஸ் வங்கியில் டாலரில் டெபாசிட் செய்திருக்கும் அரசியல் வாதிகள்தான்.

மத்திய அரசின் திருட்டுத்தனத்தை மக்கள்தான் ஒருவருக்கொருவர் சொல்லி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.  மக்களே நாம் புரட்சி என்று தீவட்டியை தூக்கி அலையக் கூடாது ஏனென்றால் முடியாது. குறைந்த பட்சம்  இந்தத் திருட்டுத் தனத்தை நாம் தெரிந்து கொண்டோம் என்ற உண்மையாவது, உணர வைப்போம். நீங்கள் எதை எழுதினாலும், பேசினாலும் இடையில் ஒரு வார்த்தை இந்த ஆதங்கத்தைப் பற்றி முணுமுணுக்காவது செய்யுங்கள். செய்தீ பரவட்டும்.

இரா.சந்திர சேகர்
பழனி.

மேலும் படிக்க...!
top