வாங்க டீ சாப்பிடலாம்.

இரண்டு தொடர்களுக்கு அடுத்த பாகங்களை எழுத நேரமில்லை. இந்தச் சூழலில் ஒரு மாதம் ஒடிவிட்டது. நவம்பர் மாத பதிவிற்காக சுறுசுறுப்பாக ஏதாவது எழுதலாம் என்று யோசித்து முதலில் டீ சாப்பிடலாம் என்ற நினைப்பில் தோன்றியவைகளை பதிந்துள்ளேன்.

நான் இங்கு டீ, எந்தநாட்டிலிருந்து வந்தது , எப்படி வந்தது,எப்படி செய்வது என்றெல்லாம் சொல்லப் போவதில்லை .அதனுடைய வேறொரு பரிமானத்தைப் பற்றிச் சொல்லப் போகிறேன்
"நான் டீ,காபி சாப்பிடுவதில்லை "என்று பெருமையாகச் சொல்பவர்களின் பின்னனியை ஆராய்ந்தால் சில உண்மை புலப்படும். அவை

1) அவர்களுக்கு நன்பர்களே இருக்கமாட்டார்கள்
2)சோம்பேறியாய் இருப்பார்கள்.
3)இளைஞர்களாக இருந்தால் அவர்களுக்கு முகத்தில் பரு இருக்கும்
4) வயதானவர்களாக இருந்தால் அவர்களுக்கு வயிற்றில் அல்சர் இருக்கும்.
5) ஏழ்மையான குடுபத்தில் இருப்பார்கள்.
6)மொத்தத்தில் கஞ்சர்களாக இருப்பார்கள்.
7)24 மணிநேர குடிகாரர்களும் டீ சாப்பிடமாட்டார்கள்.

என்னைப் பொறுத்தவரை டீ,காபி சாப்பிடுவதில் தவறேதுமில்லை. ஏழைகளின் அல்லது உழைக்கும் வர்க்கத்தின் புத்துணர்ச்சி பானமாக இருக்கிறது. ஆண்களுக்கு” டீ ”என்றால் பெண்களுக்கு காப்பி என்று ஆகிவிட்டது. பொதுவாக சைவர்கள் காபியை விரும்பி சாப்பிடுவதால் சிலரால் டீ அசைவமாக கூட கருதப் படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் அது ஒரு பொருளாதாரப் பிர்ச்னையாக மாறிவிட்டது.2008ல் ஒரு டீ 2 ரூபாயாக இருந்தது, கலைஞரின் புண்ணியத்தில் 5 ரூபாய்க்கு வந்து விட்டது. அவர் தனது பேரப் பிள்ளைகளின் டீச் செலவை வைத்து டீயின் விலையை 15 ரூபாயாக தீர்மானித்தார். அதில் இந்த குறைந்தபட்ச உத்திரவாதத்துடன் கூடிய உபசரிப்பு பானமான டீயின் விலை ஏறியதால் ஏழைமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

ஒரு திரைப்படத்தில் .
கவுண்டமணி ஒரு கிராமத்தில் வைத்தியம் பார்த்து கொண்டிருக்கிறார். அப்பொழுது அவரிடம் ஒருவர் தலையை சொறிந்து கொண்டு வருகிறார்..
வ‌ந்த‌வ‌ர் இளிக்கிறார்..
"நான் நூறு வ‌ருஷ‌ம் வாழ‌ணுங்க‌..அதுக்கு நீங்க‌ தான் ஒரு ம‌ருந்து சொல்ல‌ணும்.."
"சொல்லீருவோம்...மொத‌ல்ல‌ இங்க‌ வா. நீ காபி டீ.. குடிப்பியா?"
”இல்லைங்க”
”பீடி , சிகரெட் குடிப்பியா”
"அந்த‌ ப‌ழ‌க்க‌மே ந‌ம்ம‌க்கிட்ட‌ இல்லீங்க‌.."
"மது மாது பழக்கம் உண்டா?.."
"அய்ய‌ய்யோ..இல்ல‌வே இல்லீங்க‌.."
........................
"அப்ப‌ என்ன‌த்துக்குடா நீயெல்லாம் நூறு வ‌ருஷ‌ம் வாழ‌ணும்..ம‌வ‌னே நீ நாளைக்கே செத்து போயிரு..இல்ல நானே ம‌ருந்து குடுத்து கொன்னுடுவேன்..காலைலேயே வ‌ந்துட்டானுங்க‌டா ”

இது கொஞ்சம் அதிகம் தான்.
ஆனால் டீ சாப்பிடுவதில் தப்பில்லை . டீ என்பது இன்றைய காலகட்டத்தில்
நீண்ட ஆயுளுக்குத் தேவைப்படும் ஆண்டி ஆக்ஸிடண்ட் (Anti Oxidant) அதிகமுள்ள பொருட்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது. அதுமட்டுமில்லாமல் டீ அதிகமாகச் சாப்பிட்டு இறந்தார்கள் என்பதற்கு புள்ளி விபரம் ஏதுமில்லை.

உழைப்பில் ஆர்வமுள்ளவர்கள் தங்களுக்கான புத்துணர்ச்சி பானமாக டீ யை பாவிக்கிறார்கள்.
மூளை வேலைக்காரர்களுக்கு வேலை செய்யும் போது தலையில் சூடு ஏறுகிறது . அவர்கள் டீ அருந்த எடுத்துக் கொள்ளும் கால இடைவெளியில் அது தன்னை ஆசுவாசப் படுத்துகிறது. புற உறுப்புகள் வேலைசெய்யும் போது அக உறுப்புகள் அமைதி காத்து பொறுமை இழந்து விடுகிறது. உடலுழைப்பு உள்ளவர்களுக்கு அந்தச் சிறிது நேர இடைவெளி, ஓய்வையும், அமைதியாக இருந்த வாய், நாக்கு, குடல் ஆகியவற்றிற்கு சிறிது வேலையும் கொடுக்கும் போது உடல் சமநிலை எய்துகிறது. இந்த நாக்கு இருக்கிறதே அது மிகவும் பொல்லாதது. அதற்கு கண்டிப்பாக வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். வெகு நேரம் நமது உறுப்புகள் அசையாமல் இருந்தால் மரத்துவிடும். அதிலும் வயிறோ தனக்கு உணவில்லை எனில் குடலையே சாப்பிட்டுவிடும்.

இப்படித்தான் சுனாமியால் பாதிக்கப் பட்ட குழந்தை ஒன்று ,முகத்தில் பட்ட அடியினால் வாயைத் திறந்தால் வலிக்குமென்று பல்லிடுக்கு வழியாக திரவ ஆகாரமாக சாப்பிட்டு வந்தது.மூன்றுமாத காலத்தில் கீழ்த்தாடை எலும்பு மூட்டுகள் இறுகி தாடை திறக்க முடியாத அளவுக்கு அதைச்சுற்றிலும் எலும்பு வளர்ந்து விட்டது.. பின்னர் இந்திய அளவில் பெரிய நிபுனர் குழு வந்து அறுவைசிகிச்சை செய்து தாடை எலும்புகளை சரி செய்ய வேண்டியதாயிற்று.

இந்த இடத்தில் உடலியலில்”சந்துருவின் தங்க விதி”(Chandru's golden rule)யைப் பற்றி தெரிந்து கொள்வது நல்லது. ”அடிக்கடி பயன்படுத்தாதது எதுவும் விரைவில் பயன் படாமல் போய் விடும்.”என்பதுதான்.

ஆகா ஒரு டீ க்கு இவ்வளவு வீடுகட்டணுமா(Build up) என்று கேட்கிறீர்கள். அது ஒரு புத்துணர்ச்சி பானமட்டுமில்லை அது ஒரு ஆரோக்கியமான மருந்து என்பதால்தான் இவ்வளவு கட்ட வேண்டியதிருக்கு. நகரத்தில் சொல்வார்கள்,” தூங்கும் போது கூட காலை ஆட்டிக் கொண்டே தூங்குடா இல்லைன்னா உயிர் போய்விட்டதாக எடுத்து புதைச்சிருவானுக “என்று அந்தக் கதைதான் அடிக்கடி டீ குடிப்பதும். வாய், வயிறு,குடல் இவற்றை அடிக்கடி வேலை வாங்க வேண்டும்.

கிராமத்தில் கஞ்சர்களைப் பற்றி பேசும் போது சொல்வார்கள் ”அவன் உமுறுக் குடிச்சுக்கிட்டே உலகத்தை சுத்திவருவான்” ஆக எப்படியோ ஒன்றைக் குடித்தால்தான் புத்துணர்ச்சி என்பது நிச்சயம் (உமுறு - எச்சில்)

இந்த டீ உங்கள் ஆரோக்கியத்திற்கான டானிக் மட்டுமில்லை. நட்பை வளர்க்கும் காம்ப்ளான். பாசமான பசங்க முன்பெல்லாம் (இப்ப உஜ்ஜாலாவுக்கு மாறிட்டாங்க).நன்பர்களைப் பார்த்துட்டா வாடா மாப்பு டீ சாப்பிடலாம் என்று கூப்பிட்டு போய் ”ஒன் பை டூ ”என்று சொல்லி டீக்கடைக்காரரை இழுத்து கட்டுவாங்க (டென்சன் படுத்துறது) .கடைசியில் “ஒன் பை டூ தானே, மாப்பு காசை நீ கொடுத்துரு” என்று சொல்லும் போது நட்பு தடுமாறினாலும் பிற்காலத்தில் மலரும் நினைவுகளில் ஒன்றாகிவிடும்.

சிலர் இருக்கிறார்கள் அவர்கள் ”வாங்க மாமா டீ சாப்பிடுங்க” என்று சொல்லி கூட்டிப் போய் டீக்கடைக்காரரிடம் ”மாஸ்டர் மாமாவுக்கு ஒரு டீ “ என்று சொல்லி வாங்கி கொடுத்துவிட்டு நீங்கள் பரிதாபமாக டீக் குடிப்பதை பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டிருப்பார்கள்.ஆகவே அவர்களிடம் ஏமாந்து அந்த டீயைக் குடிக்காதீர்கள். ஆளைப் பொறுத்து அவர்களிடம் மாப்பிள்ள நான் பூஸ்ட் தான் சாப்பிடுவேன் என்றோ அல்லது சாப்பிட்டா இரண்டும் பேரும் சாப்பிடுவோம் என்றோ அல்லது என்னிடம் காசு இருக்கிறது இரண்டும் பேரும் சாப்பிடலாம் என்று சொல்லியோ சமாளித்துக் கொள்ளுங்கள்.

கலைவாணர் என் எஸ் கே, தன் காதலைச் சொல்ல தனது காதலியின் வீட்டிற்குச் சென்றாராம் அவரை விருந்தோம்பும் விதமாக அவரது காதலி ”என்ன சாப்பிடுகிறீர்கள் டீயா காபியா?” என்று கேட்டாராம்..அதற்கு கலைவாணர் ”எனக்கு டீ ஏ மதுரம்” (T.A.Mathuram)என்றாராம். (மதுரம் என்றால் இனிமை என்று பொருள்மட்டுமல்ல அவரது காதலியின் பெயரும் அதுதான்).

நீங்கள் வீட்டில் இருந்தால் உங்கள் மனைவியை அடிக்கடி டீ கேட்டு வாங்கிப் பருகுங்கள், கேட்டால் ”உன்னைப் போல் யாரும் டீ போடமுடியாது என்று சொல்லுங்கள்,அது என்னமோ தெரியலை நீ டீ போட்டா நல்லாருக்கு ”என்று சொல்லுங்கள். ஏனென்றால் பிற்காலத்தில் சன்டையைத் தீர்க்கும் சமாதானக் கொடியாக இந்த டீயை இருவருமே பயன்படுத்தலாம்.

வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரிக்க டீ கொடுங்கள். எப்பொழுதும் வீட்டில் நல்ல டீத்தூள் வைத்திருங்கள். பால் இல்லை என்றாலும் பரவாயில்லை கறுப்பு டீயாக கொடுங்கள்.வீட்டில் இதெல்லாம் நடைமுறைப் படுத்த நீங்கள் ஒருநாளைக்கு இரண்டு டீ யாவது சாப்பிட வேண்டும். உங்களது நன்பர் வீட்டிற்கு சென்று வெகு நேரமாகியும் டீ வரவில்லை என்றால் நன்பரை அழைத்து ”வாப்பா வீட்டுல தொந்தரவு பன்னாம வெளிய போய் டீ சாப்பிட்டு வரலாம் ”என்று சொல்லி அவருக்கு நல்ல பழக்கத்தை சொல்லிக் கொடுங்கள்.

இப்படித்தான் சமீபத்தில் எனது வேலைக்காக ஒரு ஆளை வெளியூரிலுள்ள எனது நெருங்கிய உறவினரை பெருமையாகப் பேசி அவர் வீட்டிற்கு அனுப்பினேன். அவர் போய்விட்டு வந்து என்னங்க ஒரு டீ கூட வாங்கித் தரவில்லை என்று குறைபட்டார். இந்தமாதிரி சந்தர்ப்பங்களில் கவனமாக இருங்கள்.அனுப்பியவர் பெயரையும் உங்கள் பெயரையும் காப்பாற்றுங்கள்.

உங்களுக்கு டீ பிடிக்கவில்லை என்றால் வாழ்க்கையில் எதையாவது சாதித்து ஒரே ஒருமுறையாவது ”அணுவுடன் காப்பி” (Coffee with Anu )சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

என்னுடைய இந்தப் பதிப்பில் உங்களுக்கு முற்றிலும் முரண்பாடு இருந்தால் பீருடன் வாருங்கள் ”சந்துருவுடன் பீர்” சாப்பிட்டுக் கொண்டே விவாதிக்கலாம்.

மேலும் படிக்க...!
top