எனது முந்தைய பதிப்பின் பின்னூட்டமாக நாட்டாமை இட்ட கேள்விக்கான பதிலை முதலில் பார்ப்போம்

கேள்வி
//இனப்பெருக்கம் அதாவது பிரதி எடுத்தல் என்பதற்கான அறிவியல் விளக்கத்தின் குறைபாடு ஒன்றுதான், அறிவு ஜீவியின் படைப்பில் அக்கறை உள்ளவர்கள் எடுத்துப் போடும் துருப்புச்சீட்டாக உள்ளது.//

இதற்கு உங்களிடம் உள்ள விளக்கம் என்ன?

துருப்புச் சீட்டு சமயத்தில் ஜோக்கராக இருக்கும்.

ஒன்றைப் போல் மற்றொன்றை, ஒருமுறையல்ல பல்லாயிரக்கணக்கான முறை இடைவிடாமல் உருவாக்கும் தொழிநுட்பம் கல் தோன்றி செல் தோன்றா காலத்துக்கு முன்னே இயற்கைக்கு கை வந்த கலை. இதைக் காண்பதற்கு நாம் காடுமலை எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை.
ஒழுகும் குழாயில் உற்பத்தியாகும் நீர்த்துளி சொல்லும், இந்த வித்தை மிகப் பழமையானது என்று. நீங்கள் சற்று மாறுபட்ட கோனத்தில் யோசிக்க கூடியவராக இருந்தால் இந்த நீர்த் துளியின் அற்புதம் உங்களை ஆச்சிரியத்தில் முழ்கடிக்கும். அது ஏன் ஒழுகும் நீர் ஒரு குறிப்பிட்ட அளவு வந்தபின் கீழே விழுகிறது. அதுவும் ஒவ்வொரு நீர்த்துளியும் அளவிலும், எடையிலும், உருவத்திலும் ஒன்று போல் இருக்க என்ன காரணம். முப்பரிமாணத்தில், வண்ணத்தில் ஜெராக்ஸ் எடுக்கும் இந்த கலையை அதற்கு யார் கற்றுக் கொடுத்தது.




காரணத்தை ஆராய்ந்தால் அது ஈர்ப்பு , பரப்பு இழுவிசை. போன்றவைகளின் கூட்டு முயற்சியே. ஆகவே பிரதி எடுக்கும் (Replicate) வேலை என்பது இது போன்ற குட்டி விசைகளின் விளையாட்டுதான். இது மட்டுமா? உப்புக்கல் உருவாகும் உப்பளங்களும் ஜெராக்ஸ் மிஷின்கள்தான்.

உப்புக் கரைசலில் உள்ள நீர் ஆவியாகும் போது உப்பு எடுக்கும் அவதாரங்கள் எத்தனை விதங்கள் என்பது தெரிந்தால் அசந்துவிடுவீர்கள். அது பற்றி படிப்பதற்கே ஒரு அறிவியல் பிரிவும் (Crystalization) உள்ளது.

உப்பும் மிளகும்.உப்பின் சதுர வடிவம்




உப்பு மட்டுமல்ல காற்றிலுள்ள நீராவி உறையும் போது வெண்பனியாய் படர்ந்தும், துராலாய் கொட்டியும், ஆலங்கட்டியாய் அடித்தும் சொல்லும் உன்மைகள் பிரதி எடுத்தலின் திறமை பற்றிதானே. ஆச்சரியப் பட வைக்கும், மனிதன் வரையமுடியாத வடிவங்களில் இயற்கை பிரதி எடுக்கும் வித்தையை பார்த்தால் தலை சுற்றும்.

சாவுப் பள்ளத்தாக்கு ஒருகாலத்தில் கடலாக இருந்து நீர் வற்றிய பின் உப்பு எடுத்த தோற்றத்தைதான் கீழே பார்க்கிறீர்கள்.



வெண்பனி


இது போன்ற பனிக்கட்டியின் படிகங்களை எளிதாக உருவாக்கலாம்





நீர்த்துளியைப் பற்றி கவிஞனின் மொழியில் கேட்டால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். அறிவியல் மொழியில் கேட்டால் சாதாராண இயற்கை நிகழ்வுகளில் ஒன்றாகும். சமதூரத்தில் பொருட்கள் அமைந்து, குறைந்த பரப்பளவுடன் உருவாகும் வடிவம் (கோளம்)உருண்டை என்பது ஜியோமிதியின் பாலபாடம்.

ஆகவே பிரதி எடுத்தலுக்கான ”அறிவுஜீவியின் படைப்பில்” (Intellectual Creation) அக்கறை உள்ளவர்களின் கேள்வி பற்றி நாம் கவலைப்படாமல் நாம் மேலே தொடருவோம்.

நான் ஏற்கனவே கூறியவாறு இதற்கெல்லாம் காரணம் எலக்ட்ரான்களின் முக்தி நிலைக்கான அல்லது சமநிலைக்கான போராட்டம் தான். அந்த போராட்டத்தின் வழியில் ஒற்றை செல் உயிரிகள் ஏறத்தாழ இருபதாயிரம் வகைகளுக்கு மேல் தோன்றியிருக்கலாம்.


அவைகளில் பிரதானமானவை அமீபா (Ameoba), பாரமசியம் (Paramecium), யூக்ளினா (Euglena), வால்வாக்ஸ் (Volvox) ஆகியவை ஆகும். இயற்கை விட்டு வைத்த மிச்சங்களில், ஆற்றல் சமநிலைக்கு எனது வழிதான் சிறந்தது என உயிரிகள் செல்லும் பாதைதான் நமக்கு போராட்டமாகத் தெரிகிறது. இன்றும் நிலைத்து நிற்கும் நமது மூதாதையர்களான ஓரணுவுயிர்களில், முக்கியமான சிலவற்றைப் பார்ப்போம்.

அமீபா (Ameoba),




அமீபா நிறமற்ற பாகு உருண்டை போன்றது, திரவம் போன்றிருப்பதால் வடிவம் மாறிக் கொண்டே இருக்கும். புரோட்டோபிளாசம் என்ற புரோட்டீன் வகைசார்ந்த உயிர்ப்பொருள் மற்றும் அல்புமென் கூழ்ப் பொருளால் ஆனது.

இவைகள்.
1)உணவு உட்கொள்ளும்,
2)மூச்சுவிடும்,
3)கழிவு வெளியேற்றும்,
4) தூண்டலுக்கு துலங்கும்,
5) கிளர்ச்சியுறும்,
6) இரண்டுபடுதலால் இனப்பெருக்கம் செய்யும்.

மேலே சொல்லப்பட்ட விஷயங்களை வேதியல் முறையில் சொன்னால்,

1)சிலபொருட்கள் குறிப்பிட்ட பொருட்களுடன் (உணவு) தான் வினை புரியும்.
2) வினையின் விளைவாக காற்று (மூச்சு)உருமாற்றப்படுகிறது.
3) வினையின் விளைவாக பொருட்களும்(கழிவு) உருமாறுகிறது.
4)வினையின் போது சக்தியை கிரகிக்கவோ வெளியிடவோ ( இயக்கம்) செய்கின்றன.
5) சக்தியை உள்வாங்கி அசாதாரண நிலையில்(கிளர்ச்சி) இருப்பது.
6) பரப்பு இழுவிசை (Surface Tension , Osmosis, Diffusion, Viscosity) போன்றவைகளால் உருமாறுவது (இனப் பெருக்கம்).

அமீபா ஒளி ஊடுருவதால் கிளர்ச்சியுற்று இடம் பெயரும் தன்மையுடையவை. நாளடைவில் பாதுகாப்பிற்காக தனது திரவ வடிவத்திற்கு ஒரு உறை ஏற்பாடு செய்து கொண்டன.

இனப்பெருக்கத்தை இவ்வாறு விளக்கலாம். நீர்த்துளி ஒரு குறிப்பிட்ட அளவு வந்தவுடன் பிரிந்து எவ்வாறு வெளியேறுகிறதோ அது போன்றே உருவத்தில் பெரிதாகும் போது இரண்டு படுகிறது. ஆக அடிப்படையாக இரண்டுபடுதலில் தான் இனப் பெருக்கம் ஆரம்பிக்கப்பட்டது. நீர்த்துளியின் உருவாக்கமே இனப்பெருக்கத்தின் வழிகாட்டி.

பாரமசியம் (Paramecium)



பாரமீசியம் நீரில் மிதக்கும் பல்வகைத் துணுக்குகளை உண்டு நீந்தி வாழ்கிறது. உடல் முழுவதாலும் ஆக்சிஸனை சுவாசிக்கிறது. இருபத்துநான்கு மணி நேரத்தில் இளம் பாரமீசியங்கள் பிளவுற்று இனப்பெருக்கம் செய்கின்றன. இவைகள் கலவியிலா இனப்பெருக்கம், மற்றும் கலவி இனப்பெருக்கமும் செய்கின்றன. ஒற்றை செல்லாக இருக்கும் பொழுதே கலவி இன்பத்தை உலகுக்கு அறிமுகப் படுத்தியது பாரமீசியமே. முத்தம் கொடுக்கும் முறையில் உட்கரு பரிமாற்றத்தை நிகழ்த்தி கலப்பு முறையிலும் இனப்பெருக்கத்தை தொடங்கி பூமியில் நிலைத்திருக்கும் போராட்டத்தை ஒற்றை செல்லாக இருக்கும் போதே ஆரம்பித்த பாரமீசியமே வாழ்க!

யூக்ளினா (Euglena),




அமைதியான நீர் நிலைகளில் தண்ணீர் சில நேரங்களில் பச்சையாக ஒளிரும். பச்சைக்கு காரணம் அதிலுள்ள யூக்ளினா எனப்படும் ஒற்றைச் செல் உயிரிகள் தான். தன் மீது உள்ள சிவப்பு புள்ளியினால் ஒளியை உணர்ந்து ஒளியை நோக்கி செல்லும். அதே போல் தன் மீது உள்ள பச்சையம் மற்றும் ஒளியின் உதவியால் கரியமில வாயுவை உட்கொள்கிறது. ஒளி இல்லாத இடத்திலும் அமீபா போல் உணவு உட்கொள்ளவும் முடியும். விலங்குகளும் தாவரங்களும், ஒரே பொது முன்னோர்களின் மூதாதையின் வழிவந்தவை என்பதற்கு யூக்ளினா ஒரு உயிருள்ள சான்று.

வால்வாக்ஸ் (Volvox)




ஒற்றை அணுச்செல்களிலிருந்து பல்லுயிரணுப் பிராணிகள் எவ்வாறு தோன்றின என்பதற்கு வால்வாக்ஸ் எனப்படும் பல்லுயிரணு செல்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும். வால்வாக்ஸ் ஒரு பச்சை உயிரணுவிலிருந்து பிறக்கிறது. இது ஒற்றை செல்லாக வாழ்க்கையை தொடங்கி தொகுப்பான அமைப்பில் வாழ்கிறது. இவைகளும் கலவியிலா இனப்பெருக்கம் தவிர கலவி இனப்பெருக்கமும் செய்கின்றன. இந்த உயிரணு பிளவுரும் போது பிளவுற்ற உயிரிகள் தனியாகப் பிரிந்துவிடாமல் சேர்ந்தே வாழ்கின்றன. அடுத்தடுத்து நிகழும் பிளவுருதல் மூலம் தாய் உயிரணுவிலிருந்து நாளடைவில் 50,000 க்கும் மேற்க்கொண்ட உயிரணுக்கள் தோன்றி பிரிந்து செல்லாமல் சேர்ந்து வாழும் தொகுப்புயிர் உருவாகிறது. அப்போது அது குண்டூசித் தலை அளவான பச்சை உருண்டையாக தோற்றமளிக்கிறது.

இதில் முக்கியமாக கவணிக்க வேண்டிய விஷயம், தொகுப்புயிராக அமைந்தபின் தனி உயிரிகளின் நீண்ட வால் போன்ற கசைகள் (மயிர்க்கால்கள்) கூட்டத்தோடு சேர்ந்தவுடன் மற்றவைகளுடன் ஒத்திசைவாக அசைகின்றன!. அதனால் தான் இயக்கத்தில் தடையில்லாமல் கூட்டமாக இயங்க முடிகிறது. ஒரே தொகுப்பாக மாறிய பின் சொந்த விருப்பு வெறுப்புகளை மூட்டை கட்டிக் கொள்வதில் முன்னோடியாகத் திகழ்கிறது. அவ்வாறு தொகுப்பாக வாழும் போது தேர்ந்தெடுக்கப் பட்டு தலைமைப் பதவி கொடுக்கப் பட்ட செல்கூட்டமே பின்னாளில் உயர் நிலை பிராணிகளுக்கு ”தலை”யாக மாறியது.

வால்வாக்ஸ் போன்ற தொகுப்புயிர்கள் பல்லுயிரணுப் பிராணிகளின் வளர்ச்சியில் முதல் கட்டமாக விளங்குகின்றன. ஓன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற கொள்கைக்கு அடித்தளம் அமைத்த வால்வாக்ஸைப் போற்றுவோம்.

கலவி இல்லா இனப்பெருக்கம் இருக்கும் போது ஏன் கலவி இனப் பெருக்கத்தை நாடின? கலவி இனப்பெருக்கத்தால் தோன்றியவைகளுக்கு தாங்குதிறன்(Survival Capacity) அதிகமாக இருந்ததுதான் காரணம். ஒற்றை செல்லாக இருக்கும் பொழுதே செல்களுக்கிடையே இருந்த தாங்குதிறன், நிலைத்து வாழும் பண்பு, இவற்றையெல்லாம் உற்று, உணர்ந்து மரபணுவில் கட்டளை(Traits) எழுதப் பழகிவிட்டன. உலகின் முதல் மென்பொருள் எழுத்தர்!!! (Software Programmer !!!.)

ஓரணுவுயிர்கள் உலகில் சுமார் 1000 மில்லியன் ஆண்டுகளாக வாழ்கின்றன. கடல் முழுவதும் பல்கிப் பெருகி பூமியை முழுவதுமாக ஆக்கிரமிக்க போட்டி ஏற்பட்டது. அவற்றில் எவை அதிக விரைவாக உணவைப் பெற்றும் ஆபத்திலிருந்து அதிக நிச்சயமாக விலகிச்சென்றும் வந்தனவோ, அவை உயிர் பிழைக்கவும் தங்கள் சிறப்பு இயல்புகளைச் சந்ததிகளுக்கு வழங்கவும் அதிக வாய்ப்புகள் பெற்றன. இவற்றில் ஒன்றை ஒன்று அழித்து, விழுங்கி, இணைத்து சற்றேக்குறைய 10000 உயிரிகள் இருக்கின்றன. இவைகளுக்குள்ளே ஒரு மறைமுக யுத்தம் ஒன்று நடந்து கொண்டுதான் இருந்தது. பொதுவான நோக்கம் உறுதிப்பாட்டை நோக்கிய சமநிலை. (Stablity through Equalibrium)

வெப்ப நீர்நிலைகளில் நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தாழ்நிலை பல்லுயிரணுப் பிராணிகள், கால இடைவெளியில் உயர்நிலை பல்லுயிரணுப் பிராணிகளாகிய ஹைட்ரா, கடற்பஞ்சுகள் என உருமாறி பரிணாமத்தின் அடுத்த கட்டத்திற்கு சென்றன.
எல்லா உயிரினங்களும் தங்கள் இனவிருத்தியை பல கோணங்களில், பல சூழ்நிலைகளில், கணக்கிட்டு வரையறுக்க முடியாத, ஆச்சரியப்பட வைக்ககூடிய, அதிர்ச்சியூட்டக்கூடிய, கோமாளித்தனமான, பயங்கரமான முறைகளில் செயல்படுத்துகின்றன. மேலும் இனவிருத்தியுடன் கூடிய அழியாத்தன்மைக்கும் ஏற்ற செயல்பாடுகளை கற்றுக் கொண்டு செயல் படுத்துகின்றன. இவற்றையெல்லாம் அவைகள் ஓர் இரவுக்குள் சிந்தித்து செயல் படுத்தியது இல்லை.

இங்கு தனிநபர் செயல்திறனுக்கு தேவையான தகவல்களை ஒரு பிறவியில் கற்றுத் தேர்வது கிடையாது. அந்த திறமை வளராத பிரானிகளிடம் இல்லை. ஆகவே ஒட்டு மொத்தமாக, பரம்பரை பரம்பரையாக படிக்கும் பாடங்களில் முக்கியமானவற்றையும் அதனால் ஏற்படும் விளைவுகளில் முக்கியமானவற்றையும் எதிர் கொள்ள வேண்டிய வழிமுறைகளுக்கு அடிப்படையான தேவைகள் ரகசிய குறியீட்டு முறையில் தலைமுறை தலைமுறையாக சுருக்கமாகக் கட்டளைகளாகப் (Traits) பதிந்து, அந்தக் கட்டளைகளை ("Programmes" in computer language) அவைகளின் வாரிசுகள், கண்களை மூடிக் கொண்டு பின்பற்றுகின்றன. அவ்வாறு கண்களை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டுமென்பதும் முன்னர் எழுதி வைத்த கட்டளையில் முக்கியமான ஒன்று.

கம்ப்யூட்டர் மொழியில் சொன்னால் மதர் போர்டில் உள்ள பயாஸ் போன்றது. புதிதாக வரும் ஒவ்வொரு மதர் போடும் பயாஸில் அப்கிரேடு செய்யப்படுவது போல் உயிரிகளும் வரும் தலைமுறைக்கு தேவையான வகையில் மாற்றங்களை செய்து கொள்கிறது.

உதாரணமாக மான்குட்டி பிறந்தவுடன் அதனுடைய அடிப்படைத் (Basic Input&output Operating System BIOS) தேவை உணவைத் தேடுவது அது தானாகவே பால் காம்புகளை கண்டுபிடித்து பாலை அருந்துகிறது அது பயாஸில் உள்ள விஷயம். அடுத்த தேவை ஓட்டம். அது மிகவும் எளிதாக உடனடியாக இன்ஸ்டால் செய்யப் படுகிறது. முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக் குஞ்சுக்கு உடனடித் தேவை பாதுகாப்பு தரும் கடலாகிய இருப்பிடம்தான், அதைக் கண்டுபிடிக்கும் மென்பொருள் அதன் பயாஸில் உள்ளது. அதனாலதான் மண்ணுக்குள் இருக்கும் முட்டையிலிருந்து வெளியே வந்தவுடன் வேறு எந்த திசையிலும் செல்லாமல் கடலை மட்டும் தேடி ஓடுகிறது. கங்காரு குட்டிக்கு அதன் தாயின் வயிற்றிலுள்ள தனது இருப்பிடமாக மாறப்போகும் பையைத் தேடுவதுதான் பயாஸில் உள்ள விஷயம்.

மன்னிக்கவும், இடையில் வைரமுத்துவின் கவிதை பிரேக்.

அம்மாதிரியான கட்டளைப்படி செயல்படும் ஒரு உயிரினத்தின் இனப்பெருக்கச் செயல்பாட்டை தனது கவிதையின் இடையில் செருகி காதலியை வர்ணிக்கும் வைரமுத்துவின் பாட்டொன்றைப் பார்ப்போம்.

”விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே”

என்று ஆரம்பித்து

"நீ பட்டு புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும்"என்று பாடிச்செல்வார்.
பட்டுப் பூச்சிகள் எப்படி மோட்சம் பெறும். இதற்கான விளக்கம் தெரிந்தால்தான் புலவனின் அறிவியலோடு கலந்த கவிதை நுட்பம் நமக்குப் புரியும். அதை அடுத்த பதிவில் காண்போம்.

  தொடர்வோம்.....................

முந்தைய பதிவு

மேலும் படிக்க...!
top